Wednesday, November 25, 2015

கிருத்திகை வழிபாடு

வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு என்ன பயன்?
வெட்ட வெளியைப் பார்!

விண்ணெல்லாம் மீன்விளக்கு.
நட்ட நடுவில்
நிலவென்னும் குத்து விளக்கு.

விழி திறந்து ஒளி பருகி
நெற்றியில் நெருப்பை வைத்தேன்
நானும் அடிமுடி அறிய முடியாதொரு அரனே!
எம் உடலும் ஒளிர்விடும் தணல் குன்றே!

என்னை வலம் வருவாய் ஏழை உலகே
உன்னை உய்வுறச் செய்திடும் என் தமிழ்  

Friday, September 25, 2015

உயிர் வளர்த்தல் (Or how to grow life)

1. அசையாதிருப்பின் அன்னை முலை சுரந்த பால் அசைந்தால்
இசையாய்ப் பொழியும் இன் தமிழ்ப் பால்

2. கதிரைக் குடிக்கும் குணமின்மையால் மானுடர்க்குக்
குதிரில் சேர்த்த மணியே உணா

3. கூர்கோடு நீள்நகம் குறுவயிறு ஆநோக்கின்
நீர்ஊறும் நாவாகும் ஊன் உண்ணியின் குறி

4. உழுது உயிர் ஓம்பி உண்பதே உணவாம் மற்றாங்கே
பழுதாம் பண்பழிக்கும் பல்லுயிர்க் கொலை

5. இன்பம் என்பது இன்கனி பறித்தல் ஈருயிர்க்கும்
துன்பம் தருவதன்றோ உயிரைக் கொன்றுணல்

6. துன்பம் உலகிற் ஏற்பட ஏதுவெனின் ஏதுவின்றி
இன்பம் பொருட்டு இன்னுயிர்க் கொலல்

7. கொன்றழிப்பான் உடல் சேறும் ஊன் ஊறித் தானே 
நின்றழிக்கும் நஞ்சாகி விடும்

8. இறையும் மறையும் பரிந்து கூறினும் கொள்ளற்க
இரையென இன்னோர் உயிர்

9. பயிரே எனினும் உயிர் உணர்வான் ஊன் உண்ணான் உண்பான்
உயிரே எனினும் அழிப்பான் உயிர் மறுத்து

10. கொன்றே ஒட்டும் உயிர் உடம்புடன் எனில் அதனில்
நன்றேயாம் உடல் ஊண் ஆதல்

Meaning:

1. As long as you do not move, you drink milk from your mother's breast
Once you move you drink the music of Tamil
(Implied, why do you need other milk?)

2. Since men do not have the ability to drink sunlight
it is deemed that they eat grains stored in granaries

3. Sharp teeth, long claws, small stomach, when seeing a (live) bovine (or other appropriate prey)
salivating - these are the signs of a carnivore
(Implied, since humans have non of these signs, they should not kill and consume)

4.  To plough, nurture life and then eat is food, otherwise
faulty it is to practice killing and eating which destroys character.

5. Joy is plucking a fruit (off a tree) for both lives (the killer and the killed)
trouble it is to take the joyful life of another

6. The reason for suffering in this world is sans need (reason)
we kill for mere pleasure

7. The meat that goes into the body of one who kills and eats shall rot in it
and itself become venom that shall destroy him over time.

8. Even if god and the scriptures prescribe it
do not take another life as your food

9. Even in a plant he who eats not meat shall sense life (and therefore consider its pain)
Whereas he who eats meat shall deny life and kill a being which clearly has life (or sentience)

10. If only by killing (and eating) your body and soul will stay together
it is better your body becomes food (for the worm)

Thursday, September 17, 2015

களிற்றுக்குக் கவிதை

பிடி[1]யினைப் பிடித்திட வழி செய்த களிறே உன்தன்
வடிவினை நினைத்திட நீங்கிடும் இடரே
துடியிடை பனிமுலைப் பாவையின் சேயே மண்ணில்
அறிவென அழகெனத்  தோன்றிடுவாயே

ஆண்டியின் ஆசைக்கெதிர்நின்ற வேழா
ஆண்டியாய் தம்பியை செய்திட்ட தோழா
வேண்டிய நொடியினில் வரம் தனைத் தருக
தோன்றிய மண்ணினில் துளிராய் எழுக

தளிர் மஞ்சள் அரைத்துக் கையினில் பற்றி
துளிர் விரல் கொண்டு களி தரும் சக்தி
வளியிணை ஊட்டி வளர்த்திட்ட வடிவா
துளிரினில் துய்த்து மலரென வா வா

அலர் கதிர் சாயல் அம்மையின் வீரா  
வளர் பிறை அன்ன கோட்டு[2]டை சூரா
நலம் பல  நவம் பல நாட்டினில் இடுக
மலரினில் கனிந்து சுவையெனப் படுக 

பனிமலை உறையும் பரமனின் பிள்ளாய்
எலி நரி பரி[3] கரி[4] எதிலும் உள்ளாய்
துணிவென துணையென வந்திடும் அழக
கனியெனக் கனன்று விதையெனப் படுக

விதையென ஓமென விளங்கிடும் பொருளே
வினையினில் விளைந்திடும் வேள்வியின் தெருளே
கதை கவி செய்திடும் காதலின் தீயே
விதையென மண்ணில் முடிந்திடுவாயே

அருஞ்சொற் பொருள் விளக்கம் 

[1] - பெண் யானை, இப்பாடலின் வரையில் பெண் யானை போல் நடையுடைய குறவள்ளி
[2] - தந்தம்
[3] - குதிரை
[4] - யானை 

Tuesday, September 08, 2015

மடமை

மடுத்து மாட்டின் மடி சுரந்த பாலை
தடுத்துக் கன்றிர்க்குக் கிட்டாமல் செய்து
குடத்தில் நிரப்பிக் கல்லுக்கு இடல் - முறையே
நடந்து நாற்றிற்குத் தான் செல்லும் நீரை
கடத்திக் கனவினிலே கனவாய்க் கண்ட
படத்தில் வரைந்த பயிருக்கிடல்

Saturday, September 05, 2015

நிந்தை

முன்னொரு காலத்தில் எழுதிய கவிதைகள் இவை. தாகூரின் "Stray birds"ஐத் தழுவியவை. அப்பொழுது அவளோடு எனக்கு நெருக்கம் அதிகம். எனவே உரிமையோடு விளையாடியதால் வந்த "வினை".

பி.கு: பாடல்களின் பொருள் புரியாவிட்டால் பதிவில் குறிப்பிடவும். விளக்கம் தருவேன். 

நள்ளிரவின் இருட்டில்
தோடு கழற்றிக் கேட்டாள்
நிலவு தெரிகிறதா?

---


வேட்டை முடித்து தோலுரித்து
வீடு வந்தவனைக் கண்டு
பிள்ளையைக் கொல்வீரோ என அஞ்சினாள்

---


காலால் காதைத் தொட்டான்
கொல் எனச் சிரித்து சொன்னாள் வெற்றி
எனதே அரை மனிதா

---


கூந்தல் முகர்ந்து
தள்ளிச் சென்றவனைக் கேட்டாள்
தாழம்பூ வாசமோ?

---


பாதம் பற்றி
மெட்டி இடுகையில்
நாக்கை நீட்டினாள்

---


நிலவில் கள் குடித்து
அவனிடம் சொன்னாள்
நான் பிடித்த ஆளுக்கு மூன்று கண்

---


மாங்கனியே என்றான் ஆசையோடு
பதறி எழுந்தாள்
பிள்ளை கோபிப்பான் என்று

---


கையில் நெறுப்பள்ளிக் கொடுத்தாள்
தலையெல்லாம் ஈரம்
பனி வேறு பொழிகிறது

---


குரல்வளையைக் கையால்
இறுக்கிப் பிடித்தாள்
கொலையும் செய்வாள் பத்தினி

---


நகங் கிள்ளாது இருப்பவளிடம்
சொன்னான் தமையன் மேல் பரிவோ?

---


வண்டியேறி வந்தவளைப் பார்த்து
எச்சரித்தான் மாடு மிரளப் போகிறது

---

மகிழ்வுடன் மணம் புரிய சம்ம்மதித்தாள் 
மாமியார் தொல்லை இல்லை

---


அவன் அவளை நோக்க 
கொங்கை இடை நின்ற 
ஆரம் கசன்றது 

---


காதல் இரவினில் 
அவன் திலகம் சூடினான் 
அவள் சாம்பலணிந்தாள்

---

வினா விடை

கவிஞன்:

பகலெல்லாம் வியர்க்க வினை பல செய்து
பணி பல புரிந்து மாலை மழையில்
நனி நீராடி நறுமலர் சூடி
மின்விழிப் பூத்துக் காத்திருக்கும் நிலமே

உன் காதலன் யார்?
இரவா? நிலவா?
அமுதா? தமிழா ?
கவியா? துயிலா?

காதல் களித்துக் கலவி பயின்று
நீ கண்ட கனவுகள் தான் என்ன?
எழுதிய கவிகள் யாது?

நிலம்:

காதல் ஒன்றே நானும் கொண்டேன்
காதலர் பலராம்எம்ம்மார்பினிலே எம்மார்பினிலே
காதல் உயிரே காதலர் உடம்பே
காதலர் மாறினும் காதல் ஒன்றே

இரவும் நிலமும் அமுதும் தமிழும்
துயிலிற் நான் கண்ட கனவின் உருவே
துயிலும் விழிப்பும் கனவும் கவியும்
காதல் என்னும் கடவுளின் களியே

பகலினிற் உழைத்தல் மாலை மழையில் நனைதல்
மலர் அணி அணிதல் மாலையிற் களித்தல்
இரவினில் மரித்தல் இறுதியில் எரிதல்
இன்னும் நிகழ்தல் எல்லாம் இங்கு
காதல் காதல் காதல் ஒன்றே

Tuesday, July 28, 2015

கலைமகளோர் கைம்பெண்

வெள்ளையுடை அணிவாள் வெறுமையிற் அமர்ந்திருப்பாள்
அள்ளும் பொருட்செல்வம் அண்டாத கன்றிருப்பாள்
விண்ணவனின் துணையாவாள் வார்த்தை பேசாள்
வெண்ணிலவை வரச் செய்த வல்லீ அபிராமி கடைக்
கண்ணியைந்த கவிஞருக்கே கலைமகளோர் கைம்பெண்

விளக்கம்:

வெண்ணிலவை இருண்மதி  (அமாவாசை) அன்று வரச் செய்த அபிராமவல்லீயின் கடைக்கண் பெற்ற கவிஞருக்குக்

கலைமகளோர் கைம்பெண் (விதவை) ஆவாள்.

எங்கனம்?

கலைமகள் கைம்பெண் இருவருமே வெள்ளையுடை தரிப்பவர்கள்.

கலைமகள் அண்டங்களைக் கடந்த வெறுமையில் சுத்த அறிவாய் வீற்றிருபாள்.
கைம்பெண் அர்த்தமில்லாத பழைய சாத்திரதுக்குக் கட்டுப்பட்டு மூலையில் வெறுமையில் வீற்றிருபாள்.

கலைமகள் பொருட்செல்வம் மிகுந்த இடத்தில் அகன்றிருப்பாள்.
கைம்பெண் பொருட்செல்வத்தின் குறியெல்லாம் தவிர்த்திருப்பாள்.

கலைமகள் விண்ணவனான் பிரம்மனின் துணைவியானாள்.
கைம்பெண் இறந்து விண்ணவனான தன் கணவனின் துணைவியானாள்.

கலைமகள் மோனத்தே இருப்பாள்.
கைம்பெண் கணவனை இழந்த துயரில் வார்த்தை பேசாதிருப்பாள்.

தாலாட்டு உரையாடல்

தந்தை:

காட்டுக் குருவி தூங்கிடுச்சு அந்த
    காக்கா கூட தூங்கிடுச்சு
பாட்டுக் கேக்கும் என் செல்லமே நீ
    இன்னுமாடி தூங்கவில்ல?

சோந்த மாடும் தூங்கிடுச்சு அங்க
    சுருண்டு நாயும் தூங்கிடுச்சு
ஆந்த மட்டும் முழிச்சுருக்கு  நீயும்
    ஆந்த போல பாக்கறியே!

மகள்:

தூக்கம் இப்போ எனக்கெதுக்கு அப்பா
    தூங்கி நானும் என்ன பண்ண?
பாக்க உலகம் பரந்திருக்கு இங்க
    படுக்க எனக்கு மனசில்லையே

நீயோ எல்லாம் பாத்துபுட்ட நல்லா
    நடப்பதெல்லாம் தெரிஞ்சுகிட்ட
நானோ இன்னும் பச்ச புள்ள எனக்கு
    எல்லாத்தையும் பாக்க வேணும்

தந்தை:

பாக்க உலகம் புதுசுமில்ல இங்க
    நடப்பதொண்ணும் நல்லா இல்ல
பாத்து பாத்தென் மனசும் கூட
    சலிச்சு போச்சு என் செல்லமே

பழசு தாண்டீ எல்லாம் இங்க
    புதுசா பாக்க ஒண்ணும் இல்ல
அழகே என் அம்புஜமே நீ இப்போ
    கண்ண மூடி தூங்கு செல்லம்

மகள்:

உலகம் ரொம்ப பழசு தான்பா இங்க
    உள்ளதெதுவும் சரியில்ல தான் ஆனா
இளமை இப்போ எனக்கிருக்கு இனிமேல்
    நல்லா செய்யும் தெம்பிருக்கு

பாக்க எல்லாம் பழசு தான்பா ஆனா
    பாக்கப் போற கண்ணு புதுசு
பாக்க இங்க எதுவும் இல்ல நாம
    பாக்க பாக்க புதுசாகுமே

தந்தை: 

பொன்னே என் ரத்தினமே என் கண்ண
    திறந்த சித்திரமே
கண்ணே என் கண்மணியே நீ
    சொல்லும் வார்த்தை சத்தியமே

கண்ணத் திறந்த்துட்டேன் டீ இப்போ
    கண்டதெல்லாம் புதுசு தானே
கண்ணே நீயும் தூங்காமலே உன்
    ஆச தீற பாத்துக்கோடீ

மகள்:

அப்பா...

 காட்டுக் குருவி தூங்கிடுச்சு அந்த
    காக்கா கூட தூங்கிடுச்சு
பாட்டு நீ படிக்கையில இப்போ
    நானும் கூட தூங்கறேனே

நல்லா அசதியால தூங்கறேனே ...
நல்லா கண்ண மூடி தூங்கறேனே ...


Thursday, July 23, 2015

கிறுக்கல்



செந்தமிழ்ப் பழகும் செந்நாப் புலவனுக்கும் தன் கரம் பற்றி
தன் கோல் எடுத்துத் தன் மகள் கிறுக்கும் கோடே கவி 

மேகபோகம்

ஏகத்திருக்கும் வானத்தே இடம் பெயர்ந்து
தாகத்தில் நீர் குடித்து நாகமாய்க் கருத்த
மேகத்தே தோன்றும் மழை

ஏகத்திருக்கும் மோனத்தே இடம் பெயர்ந்து
தேகத்தெழுந்த தீயினில் யாகமாய் வளர்த்த
மோகத்தே தோன்றும் முத்தி

Friday, July 03, 2015

களைத்து வந்தேன்

களைத்து வந்தேன் அம்மா கடவூர் அம்மா
கடைத்தேற வழி சொல்லாயோ என் அம்மா

களைந்தும் வந்தேன் அம்மா கடவூர் அம்மா
உடை உடல் உயிர் உறு உணர்வெல்லாம் வெறுத்து
விடை வழி விடுதலை தருவாயே என் தாயே என்று
மலை மடு மாநிலம் எல்லாம் தேடிப் பின் ஓடி (களைத்து வந்தேன்)

அலைவதற்கொர் இடமுமில்லை அகத்தினிலே துணிவுமில்லை
நிலையானவளே முழு நிலவானவளே எனக்குமோர்
நிலையருளாயோ நீயிரங்காயோ நீலி நினை நாடி
உலை கொதி நீரென உலகினிலே உழைத்து உழன்று (களைத்து வந்தேன்)

Monday, May 18, 2015

yagyO yagyEna kalpatAm

வங்கிலே ஒளிந்து பின் வாழ்வென வளர்ந்திடும்
எங்கள் மூச்சுக்காற்றிலே எழுந்திடும் எழுந்திடும்
கண்ணும் காதும் வாயுமே மனம் உயிர் ஒன்றியே
செங்கனல் சோதியாய் சுடர் தரும் வேள்வியாய்
செங்கனல் சேர்கவே செங்கனல் சேர்கவே 

Saturday, May 16, 2015

அடியார்கடியான்

நடந்தாய் பறையன் சொல்ல பின் பாய் விரித்துப்
கிடந்தாய் இன்னொருவன் சொல்ல கல் மேல் நின்றாய் - பார் கடலுள்
படமெடுத்தப் பாம்பின் மேல் படுத்திருக்கும் பெருமாளே
கடல் சூழ் உலகுக்கெல்லாம் நீயோ தலை?

விளக்கம்:

பறையனான பக்திசாரன் (திருமழிசை ஆழ்வார்) சொல்ல காஞ்சி மாநகரை விட்டு அவன் பின்னே நடந்து சென்றாய்.
அதன் பின் அவன் மீண்டும் படுக்கச் சொல்ல உன் பைந்நாகப் பாய் விரித்துப் படுத்தாய்.
மேலும் புண்டரிகனை நீ காணச் சென்ற போது அவன் தாய் தந்தையின் சேவையில் இருந்ததால் அவன் சொல் கேட்டு அவன் எரிந்த செங்கல் மேல் நின்றாய்.
பாற்கடலுள் ஆதிசேடனைப் படுக்கையாய்க் கொண்ட பெருமாளே,
(இப்படி கீழ்குலத்தோர், மேல்குலத்தோர் என்று பார்க்காமால் எல்லோரும் சொன்ன வண்ணம் எல்லாம் அடியார் போல் செய்த) நீயோ
கடல் சூழ்ந்த இவ்வுலகிற்குத் தலைவன்?

English meaning:

You listened to the words of Bakhtisarar (Thirumazisai Alwar) who was a pariah and walked with him leaving the city of Kanchi.
Then when he ordered you to return, you spread your snake bed and lied down again.
When you went to visit Pundalik and he asked you to stand on a brick as he was busy attending to his parents, you stood patiently.
O Vishnu who has the hooded Adi Seshan as your bed in the ocean of milk,
Are you (who obeyed the orders of lower caste and upper caste people as if you were their servant) worthy to be the head of this world surrounded by the oceans?

Friday, May 15, 2015

கறையானாம் கதிர்வேலன்

மரந்துளைக்கும் மாபெரும் படை சமைக்கும்
அரவிற்கு இடமளிக்கும் சேவலுக்கு வாழ்வளிக்கும்
மறையாத கடவூர் நிலவின் கலையாத பித்தருக்கே
கறையானாம் கதிர்வேலன்

விளக்கம்:

மறையாத கடவூர் நிலவாம் அபிராமியின் மேல் கலையாத காதல் கொண்ட பித்தருக்கு
கறையானும் கதிர்வேலனும் ஒன்றாம்.

எங்கனம்?

கறையான் மரத்தினை துளைத்து உண்ணும்.
மாமரமாய் நின்ற சூரனை வேல் கொண்டு கதிர் வேலன் துளைத்தான்.

கறையான் பெருங்கூட்டமான படையை அமைத்து வரும்.
முருகன் தேவர் படையைக் கட்டி ஆண்டான்.

கறையான் தான் கட்டிய புற்றில் பாம்பிற்கு இடம் அளிக்கும்.
முருகன் தன் காலடியில் பாம்பிற்கு இடம் அளிப்பான்.

கறையான் சேவலுக்கு உணவாகி வாழ்வளிக்கும்.
முருகப் பெருமான் மரமான சூரனை சேவலும் மயிலுமாய் மாற்றி வாழ்வளித்தார்.


English meaning:

For those who have unwavering madness towards the never fading moon of tirukkadavUr,
termites and Murugan are the same.

How?

Termites pierce wood and eat it.
Murugan pierced Surapadman when he transformed himself into a tree with his spear.

Termites create huge swarms with soldier termites thereby making armies.
Murugan was the leader of the armies of the Devas.

Termite hills are used by snakes as their residence.
Murugan has a snake at his feet along with the peacock.

Termites become food for roosters and thereby give them life.
Murugan spared the life of Surapadman when he split his tree form into cocks (rooster and peacock).

எலிப் பெருமாள்

நிலம் துளைக்கும் நல்லரவின் வயிற்றில் துஞ்சும்
புலம் மூழ்கும் வெள்ளத்தில் புறம் வரும் சிற்றுடம்பால்
உலகாளும் கடவூர் நிலவின் பித்தருக்கே
எலியாவார் எம்பெருமாள்

விளக்கம்:

சிறிய உடம்பால் உலகையே ஆளும் கடவூர் நிலவாம் அபிராமியின் பித்தருக்கு
எலியும் பெருமாளும் ஒன்றே.

எங்கனம்?

எலி நிலத்தை துளைத்து தன் வலையை அமைக்கும்.
பெருமாள் வராக அவதாரத்தில் பன்றியாய் உலகைத் துளைத்தார்.

எலி பாம்பால் உண்ணப்பட்டு அதன் வயிற்றில் மடிந்து துஞ்சும்.
பெருமாள் ஆதி சேடனின் மடியில் துஞ்சுவார்.

எலியானது நிலம் மூழ்கும் வெள்ளம் வரும் காலத்தே வெளியே உயிர் பிழைக்க வரும்.
பெருமாள் நிலமெல்லாம் மூழ்கும் ஊழிப் பெருவெள்ளத்தில் மத்ஸ்ய அவதாரமாய் வெளியே தோன்றுவார்.

எலி தன் சிறிய உடம்பால் உலகெல்லாம் பரவி ஆளும்.
பெருமாள் வாமன அவதாரத்தில் சிறிய உடம்பால் உலகையே ஆண்டார்.

English meaning:

To those afflicted by the madness of the tirukkkadavUr moon that rules all worlds by her small body,
Vishnu and a rat are the same.

How?

The rat digs burrows in the earth to make its home.
Vishnu drilled the earth in his Varaha avatar.

The rat gets consumed by snakes and dies in its stomach.
Vishnu sleeps in the belly of Adi Seshan.

When the land gets flooded with water, the rat comes out.
When the world gets flooded in the primordial flood, Vishnu appears as the Matsya.

The rat rules over all lands by reproducing rapidly despite its small body.
Vishnu conquered all lands with his small frame as Vamana.

Thursday, May 14, 2015

வேசியிடம் முக்தி

உடை களைவாள் மெய் உணர்வளிப்பாள்
மணையழிப்பாள் பொருள் எல்லாம் பாழ் செய்வாள்
மறை இன்பம் தருவாள் உரைத்திடவும் முடியாது
கலை நிலவாம் கடவூராள் காதல் பித்தருக்கே
விலை மகளே வீடா வாள்

விளக்கம்:

கலை நிலவான கடவூரின் அபிராமியைக் காதலிக்கும் பித்தருக்கே
விலை மகளே நிலையாம் வீடு பேறாகும்.

எங்கனம்?

விலை மகள் தன் உடை களைந்து நிர்வாணமாவாள்.
வீடு பெற்றால் உடை இழந்து நிர்வாணம் ஆவோம்.
விலைமகள் உடம்பினைத் தீண்டி உண்மையான இன்ப உணர்வளிப்பாள்.
வீடு பேறு உடம்பை அழித்து மெய்ஞான இன்பம் அளிக்கும்.
விலை மகள் தலைவனின் வீட்டையும் பொருளையும் அழிப்பாள்.
வீடு பெற்றால் வீட்டையும் பொருளையும் விட்டொழிப்போம்.
விலை மகள் ரகசியமான (மறை) இன்பம் தருவதால் யாரிடமும் சொல்ல முடியாது.
வீடு பேறு மறையான வேதம் சொல்லும் இன்பம் தரும், அவ்வின்பத்தைக் கண்டவர் விண்டிலர்.

English meaning:

For those mad men who are in love with the full moon of tirukkadavUr,
a courtesan and mukthi or enlightenment are one and the same.

How?

The courtesan removes her clothes and becomes nude for her master.
Enlightenment results in the person losing body consciousness and thereby clothes.
The courtesan touches the body and provides true sexual pleasure.
Enlightenment leads to true spiritual joy.
The courtesan destroys the master's house and his wealth.
Enlightenment results in the person letting go of home and wealth.
The joy that a courtesan gives is secret and therefore cannot be disclosed to anybody.
The joy of enlightenment is that of the Vedas (maRai in Tamil means both hidden and the Vedas or any scripture in general) and is not disclosed by its nature.

மகா சக்தியும் மாட்டுச் சாணியும்

தவத் தீயில் தான் எரியும் எரிந்தக்கால்
சிவனுடம்பின் மீதிருக்கும் நோய் நீக்கும் கடவூரின்
வானம் நிறைத்த நிலவின் பித்தருக்கே மாட்டுச்
சாணமாகும் மகா சக்தி

விளக்கம்:

திருக்கடவூரின் வானத்தை நிறைத்த நிலவான அபிராமியின் பித்துப் பிடித்தவருக்கு
மாட்டுச் சாணியும் மகா சக்தியாம் அம்பிகையும் ஒன்றேயாம்.

எங்கனம்?

மாட்டுச் சாணி வரட்டியாக்கப்பட்டு வேள்வியித் தீயில் எரியும்.
அம்பிகை தட்சனின் வேள்வித் தீயில் எரிந்தாள்.
எரிந்த வரட்டியின் சாம்பல் சிவனின் திருமேனியில் பூசப்படும்.
அம்பிகை எரிந்த பின் அவளுடம்பை ஈசன் தூக்கி அலைந்தான்.
மாட்டுச் சாணி நோய் விளைவிக்கும் கிருமிகளைக் கொள்ளும் குணம் உள்ளது.
அம்பிகையோ பிறவிப் பெருநோய் நீக்க வல்லாள்.

Meaning in English:

For those who are afflicted with the madness of the full moon that filled the skies of Tirukkadaiyur (Abhirami),
cow dung and maha sakthi ambal are the same.

How?

Dried cow dung is the fuel for vedic sacrifice.
Ambal fell into the sacrificial fire of her father Dakshan when she was born as Dakshayani.
Ashes from the cow dung burnt in sacrifice is what Sivan applies on his body as Vibhuti.
After she was burnt, Siva carried carried Dakshayani's body all over the world.
Cow dung has germicidal properties and therefore prevents disease.
Ambal is the medicine for the disease of birth.

Wednesday, May 13, 2015

புளியப் பெருமாள்

குழம்பாக்கும் விதை தவிர்த்து ரசமாக்கும் 
கழுகேறும் காலடியில் அரவடங்கும் பேரூர்
தலத்தில் தோன்றிப் பிறவாதிருக்கும் கடவூர்
நிலவினைக் கலந்திருக்கும் பித்தருக்கேப்
புளியாகும் பெருமாளே

விளக்கம் 

திருக்கடவூரின் நிலவாம் அபிராமியைக் கலந்து நிற்கும் பித்துப் பிடித்தவருக்கெல்லாம்
புளியமரமும் பெருமாளாம் ஓன்றேயாம்.

எங்கனம்?

புளி குழம்பு செய்யும்
பெருமாள் மாயை எனும் குழம்பு செய்பவர்

புளியொடு விதை (பருப்பு) தவிர்த்தால் ரசம் செய்யும்
பெருமாள் பிறப்பென்னும் விதையைத் தவிர்த்து ரசம் செய்பவர்

புளிய மரத்தின் மேல் கழுகு ஏறும்
பெருமாள் கருடன் மீது ஏறுவார்

புளிய மரத்தின் காலடியில் பாம்பு வாழும்
படுத்திருக்கும் பெருமாளின் காலடியில் ஆதிசேடன் அடங்குவான்

பேரூர் தலத்திலே பிறந்தும் பிறவாப் புளியான புளியமரம் இருக்கும்
பேரூராம் பூமியிலே பல முறை பிறந்த போதும் பெருமாள் பிறப்பற்று இருப்பார்

Monday, May 11, 2015

செருப்பாகும் சிவ சக்தி

எமைத் தாங்கும் வெளிநின்று வழிகாட்டும்
எமைக் காத்து அழுக்கெல்லாம் தான் உண்ணும்
இரு பொருளும் எண்ணிப் பார்த்தால் ஒன்றேயாம் 
திருக்கடவூர் தாயவளின் முளை மொய்த்த பித்தருக்கே
செருப்பாகும் சிவ சக்தி 

விளக்கம்: 

திருக்கடவூரின் தாயான அபிராமியின் முலையை (வண்டு போல்) மொய்த்துப் பாலுண்ணும் பித்துப் பிடித்தவருக்கு 
செருப்பும் சிவசக்தியும் ஒன்றேயாம்.

எங்கனம்?

இரண்டும் 

எமைத் தாங்கிப் பிடிக்கும்
வெளி நிற்கும் (செருப்பு - வீட்டுக்குள் வராது வெளியே நிற்கும், சிவசக்தி எதிலும் அடங்காது வெளி நிற்கும், மேலும், வெட்ட வெளியில் நிற்கும் எனவும் பொருள் கொள்ளலாம்)
எமைப் (உலகத்து ஆபத்துகளின்று) பாதுகாத்து எமக்குச் சேர வேண்டிய இழிவு அழுக்கெல்லாம் அது உண்ணும் 
வழியைக் காட்டும் 
இரண்டு பொருளாய் இருந்த போதும் எண்ணினால் ஒரு பொருளாகும் (செருப்பு எண்ணிக்கையில் ஒன்று, சிவசக்தி ஆழ்ந்து எண்ணினால் ஒன்று)

ஆங்கிலத்தில் பொருள் (English translation):

For the madmen who suck on the milk from the breasts of the TirukkadavUr mother, 
slippers and Siva Sakthi are one.

How?

Both,

hold us up,
stand outside (slippers stand outside the home, Siva Sakthi stands outside the universe. The world veLi in Tamil also means expanse. So the meaning could also be understood as Siva Sakthi stands in the expanse of the universe),
show the way,
protect us (from all dangers of the world) and eat all the ignominies and dirt that should have come to us
though they appear as two, if meditated (or counted - the word eNNi in Tamil means both to think and to count), are one.

Thursday, April 02, 2015

முலையமுது

கனியோ தீரும் மலரோ வாடும் - செங்
கதிரோ சாயும் நள்ளிரவும் விடியும்
பிணியும் போகும் பாழுயிரும் அடங்கும் 

குறுவாய் விரிவிழிக் களியிடைப் பெண்ணே உன் 
முகில்தொடுமுலையின் மென்முனை கூடி

கண்டதும் கேட்டதும் உண்டதும் உயிர்த்ததும்
உற்றதும் அறிவினில் அமுதென வாழும்

Monday, March 30, 2015

நாயாகும் சிவனே

திரிவது காடு தின்பது பிணமாம்
உடுப்பது வானே சாம்பல் அணியே
கடவூர் நிலவை நித்தம் காணும்
பித்தருக்கெல்லாம் நாயாகும் சிவனே

விளக்கம்:

கடவூரின் நிலவாய் அமைந்த அபிராமி என்னும் நிலவை
எப்பொழுதும் மனதில் காணும் பித்து பிடித்தவருக்கு
நாயும் சிவனும் ஒன்றாம்.

எங்கனம்?

இருவரும்

திரியும் இடம் காடாகும்.
உணவாவது பிணமும் புலாலும் (மாமிசம்).
உடை வானமாகும் (அதாவது நிர்வாணம்).
அணியும் அணிகலன் புழுதியும் சாம்பலாகும்.

ஆங்கிலத்தில் விளக்கம்: (English meaning)

For the men who are afflicted with the madness of seeing the full moon that resides in TirukkadavUr (Abirami),
the dog and Siva are one.

How?

They both,

Live and roam in graveyards.
Eat corpses and flesh.
Wear nothing but the sky.
Adorn themselves in dust and ashes.

கோடைப் பாட்டு

வாராய் கோடையின் வெயிலே - வந்து
தீராய் எங்கள் துயரே
வாடைக் குளிரின் பகையே - நீ
தாராய் உந்தன் நகையே

கூதிர் குளிரில் நடுங்கி - எங்கள்
குரம்பை ஓய்ந்ததொடுங்கி
பாதி உயிராய் தேய்ந்தோம் - சோம்பற்
நோயிற் உழன்று மாய்ந்தோம்

நீரின் தாகம் மறந்தோம் - நீடு
நிழலின் அறுமை மறந்தோம்
காரின் கருணை மறந்தோம்
வாழ்வின் குறியை இழந்தோம்

சோதிக் கனலே வருக - எங்கள்
நாடி நரம்பும் உருக
உறைந்த உதிரம் உயிர்க்க - எம்
மேனியெல்லாம் வியர்க்க

நீ

வருவாய் கோடைத் தீயே வந்
தெரிப்பாய் எங்கள் நோயே
தருவாய் வேள்வித் தீயே - அதில்
இடுவாய் உயிரின் நெய்யே

பழைமை மடமை கொன்று - சோம்பற்
பகையை வீழ்த்தி வென்று
உழைப்பை உயிரில் நடுவாய் வீண்
உறக்கம் உடலில் கெடுப்பாய்

வெப்பம் வியர்வை வெயில் - இவை 
யாவும் வினையின் குறியாம் 
வினையில் இயைந்த உயிர்க்கு நீ 
உணர்வாய் உரமாய் வருவாய் 

அன்னை சக்தியின் தீயே - உலகை 
உழன்றிடச் செய்யும் நோயே 
உழைப்பிற்க்கெல்லாம் தாயே 
எம்மை பாடிடப் பணித்திடுவாயே 

Monday, February 23, 2015

எட்டாக் கனி

சிலை*யொன்றும் வளைத்ததில்லை சேனையும் சேர்த்ததில்லை
அலை கடலைத் தாண்டி வரும் ஆற்றல் ஏதும் எனக்கில்லை
வலை வீசும் விழியழகே வஞ்சமில்லா உயிரழகே
கலையாத நின் காதல் நான் அடைவது எவ்வாறே?

*சிலை - வில் 

Wednesday, February 18, 2015

சாரல்

அடை மழைக்குப் பின் சாரல்
கடைசியில் அணைத்து நீ தந்த
நெற்றியில் முத்தம்

In English - http://agnibarathi.blogspot.in/2015/02/drizzle.html

Thursday, January 15, 2015

போகிப் பாடல்

புகையெனப் போன்மின் பழைமைகாள்
    தீயிற்ப் பட்டழிந்து போன்மின்
பகை நீர் எமக்கே பரிதிமுன் பனியே
    போல் பற்றழிந்து போன்மின்
வகை வகையே வாழ்வு புதுமை செய்வோம்
    படைப்பு செய்வோம் காண்மின்

அரைக் கணமும் நினையோம் உம்மை
    அடியோடு மறைந்து போன்மின்
நிறை நிலவு எந்தன் சிந்தை
    நித்தம் நவமெனச் சுடர் செய்வோம்
மறை செய்வோம் மனம் வளர்ப்போம்
    மதியினிலே தீ வளர்ப்போம் எனவே (புகையெனப்...)

விழியிரண்டில் கதிருண்டு காப்புண்டு
    வாயதனில் தமிழுண்டு கோலுண்டு
வழியதனைச் செம்மை செய்ய
    வாள் வீசும் காளியுண்டு
கலி தீர்த்தோம் களையறுத்தோம்
    களம் வென்றோம் புறம் காட்டி (புகையெனப்...)
 

Sunday, January 11, 2015

அவசரம்

அண்டம் ஆயிரம் சுழலச் செய்த அலகிலா ஆண்டவனுக்கு
அரளிப்பூவில் வண்ணம் தீட்ட அரை நொடி உளதே
அற்பச் செயலே என்றும் செய்யும் உனக்கும் எனக்கும்
அவசரம் அவசரம் அவசரம் ஏனோ?

In English - http://agnibarathi.blogspot.in/2015/01/haste.html

Saturday, January 10, 2015

கிளிப் பாட்டு

காலைச் சூரியன் கண்டே 
    நான் கிடந்தேன் காளியின் களியில்
சோலைக் கிளிகள் வந்தே 
    கவி பாடின வெட்ட வெளியில் 

கூடிய கிளிகளில் ஒன்று 
    என் மானிட வடிவைக் கண்டு 
நாடியே என்னிடம் வந்து 
    பாடியதே தமிழ்ச் சிந்து 

கிளிப் பாட்டு:

கேளாய் மானிடப் பதரே 
    உனக்குபதேசம் செய்திட வந்தேன் 
சொல்லினில் தமிழைச் சேர்த்து 
    நான் சொல்லுவதெல்லாம் தேன்! தேன்!

ஓமெனும் மந்திரம் போலே
    உனக்கோர் மந்திரம் சொல்லிட வந்தேன்
பூமியில் எதையும் கண்டால் 
    நீ கேட்டிடுவாய் இது ஏன்? ஏன்?

கவலை என்றும் இல்லை 
    நாம் காற்றில் பறக்கும் சாதி 
காற்றில் பறந்து கொண்டே 
    கதிரினில் கலக்கும் சோதி

சோம்பல் என்றும் பகையாம் 
    அதை வினையால் சுட்டிட முடியும் 
சாம்பல் பூசும் சிவனின் 
    சகியால் காயும் கனியும்

சாத்திரம் எல்லாம் தேடு 
    அதில் பொய்மை எல்லாம் சாடு 
ஆத்திரம் அதனைப் போற்று 
    ஆனால் அதையும் ஆறப் போடு 

காதல் வீரம் மானம் 
    மூன்றும் நமக்கு உயிராம்
சாதல் இல்லா சக்தி அவளின்
    புகழே நமக்குப் பயிராம்

கிக்கீ எனுமோர் கூட்டம் 
    இன்னும் குக்கூ எனுமோர் கூட்டம் 
கிக்கீ குக்கூ எல்லாம் 
    இங்கு சக்தி அவளின் ஆட்டம்

கூட்டம் கூட்டி இங்கே 
    செய்திடுவார் சிலர் பூசல்
வாட்டம் வஞ்சனை வளர்த்துப் 
    பின் மாய்ந்திடும் அவரோர் ஈசல்

சாதல் ஒன்றே திண்ணம் 
    எனும் உண்மை நாம் அறிந்தோமே
காதல் கவிதை கொண்டே 
    சாவையும் அறுத்தெரிந்தோமே

பாடு பாடு பாடு
    தமிழ் இருப்பது பாடத் தானே
பாடு உனக்கிங்கேது 
    உனக்கென பொழியுது வானே 

ஓம் ஓம் சக்தி என்றே 
    நீ நித்தம் சொல்லிடுவாயே 
ஓம் ஓம் சக்தி என்றால் 
    நீ முற்றும் உணர்ந்திடுவாயே


சொல்லிய கிளியும் சென்று 
    சேர்ந்தது சித்பர வெளியில் 
சொல்லிய பாட்டைக் கேட்டு 
    நான் மரித்தேன் காளியின் களியில்

ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் 
    இனி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் 
ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் 
    என ஓயாது உரைத்திடுவோம் ஓம்