Wednesday, December 27, 2006

இறைவன் நான்


தவழும் தென்றலடா நான்
தரணி எங்கும் வாசமாகும்

நடக்கும் நதியடா நான்
நிலம் எல்லாம் என்னால் வளம்

காலைக் கதிரடா நான்
கண் விழித்தால் உலகுவிடியும்

சிரிக்கும் நிலவடா நான்
சிந்தையும் குளிர்ந்துவிடும் என்னொளியில்

தெரிக்கும் மழையடா நான்
தொட்ட இடமெல்லாம் தூய்மையாம்

மகிழும் மலரடா நான்
மலர்ந்தால் அணைத்தும் ஒளி

பரந்த விண்ணடா நான்
விரிந்தால் வையம் அடங்கும்

எரியும் நெருப்படா நான்
வீறு கொண்டால் எல்லாம் அழியும்

பாயும் புலியடா நான்
குரல் கொடுத்தால் குலை நடுங்கும்

சீறும் பாம்படா நான்
சினம் கொண்டால் படை நடங்கும்

பெருகும் வெள்ளமடா நான்
செறுக்கடைந்தால் தடையெல்லாம் தூள்

சுழலும் புயலடா நான்
துணிவு கொண்டால் உலகம் அஞ்சும்

நிறையும் இறையடா நான்
விளையாடினால் பிரபஞ்சம்

Monday, December 18, 2006

சக்தி பாட்டு

இன்புற்று இருப்பது வாழ்வு - அதில்
துன்பம் என்பதோர் பொய்யே
அன்புற்று இருப்பது இயல்பு
பண்பு இயல்பின் திறனே

ஆசை என்பதோர் பூசை - பேர்
ஆசை அதனிற் பீடை
ஓசை அனைத்தும் இசையே
பாஷை நமக்குக் கவியே

எண்ணம் என்பது எரியே - அதில்
பின்னம் நேர்வது பழுதே
திண்ணமாவது கருத்தே
சின்னமதற்கு நம் வி
னையே

காதல் நமக்கின்னுயிரே - வருந்தி
நோதல் நமக்கொரு நோயே
வேதம் என்பது அறிவே
சாதல் அதனாற் பொய்யாம்

சக்தி அவள் நம் துணிவே - பிரிந்து
புத்தி செய்வது பிழையே
சித்தி அவள் தரும் வரமே
சக்தி என்பது மெய்யே

Friday, December 15, 2006

சக்தி வருவாயே

நிலவாடும் இரவினிலே நதியோடும் கரையினிலே
கலவியிலே கலந்தாடி களியினிலே கவிபாடி
பலகாலம் பலபொழுது பாட்டினிலே பசிமறந்திருக்க
சிலநேரம் என்னோடு சிவசக்தி நீ வருவாயே

காதலிலே கருத்திணைந்து கையோடு கை சேர்த்து
நாதமெனும் தேவி நீ நான் எனும் நிலை எய்தி
போதமெல்லாம் போக்கி பொருளெல்லாம் பெற்று
காதலென காதலென கலந்திருக்க காளி நீ வருவாயே

ஆவியிலே தவம் இருத்தி மோகமென்னும் தீ வளர்த்து
தேவிநீ தேகமெல்லாம் யாகம் செய்து உள்ளமெங்கும்
மேவியோர் நினைவின்றி மதியின்றி மனமின்றி
தேவியவள் சக்தியென சக்தியென காதலென நீ வருவாயே

Sunday, November 12, 2006

கவிதை கேட்கும் காலைப் பொழுது


காலைப் பொழுது
மீண்டும்,
இன்னுமொரு காலைப் பொழுது
என்று
தள்ள முடியா
காலைப் பொழுது
இது
கவிதை கேட்கும் காலைப் பொழுது

இரவுக் குழந்தை
விழித்து
விடிந்து
கண் திறந்து
தெளிந்து
பகலாய்ப் பிறந்து
கதிராய் விரிந்து
பின்
என் சாளரம் வந்து
விழி தீண்டி
உயிர் தொட்டு
கவிதை கேட்கும் காலைப் பொழுது

குயிலிடம் பாட்டும்
மலரிடம் ஒளியும்
விண்ணிடம் இசையும்
நேற்றைய
நிலவிடம் மணமும்
பெற்று
என்னிடம்
கவிதை கேட்கும் காலைப் பொழுது

தவம் செய்து...
இரவெல்லாம் தவம் செய்து
வரமாய் என்னிடம்
கவிதை கேட்கும் காலைப் பொழுது

இனி
நாமோர் தவம் செய்வோம்.
தொழில் செய்து, உழன்று
இன்பம் சிலவும் துன்பம் சிலவும் கண்டு
வியர்வை ஒரு துளி சிந்தி
தொழில் செய்து
தவம் செய்வொம்.

தவம் செய்தால்,
இரவோர் வரம் தரும்.
கவிதை என்று
ஓர் வரம் தரும்.
அவ்வரந்தனை இரவல் தருவோம்
இரவலாய்
கவிதை கேட்கும் இந்த காலைப் பொழுதிற்கு

Thursday, October 26, 2006

தீ உண்டு

தீயொன்று உண்டே
வேனில் மலரின் உள்ளிருந்து சிரிக்கும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
காய்ந்த சருகெடுத்து உயிருடன் உண்ணும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
ஆலயத்திருந்து அமைதியில் அமரும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
அடுப்பினில் துவண்டு உழைப்பினில் உருகும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
காரணமொன்று இன்றி கானகம் கொல்லும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
அன்னமோராயிரம் உயிர்க்கிட்டு அகிலமளிக்கும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
காதலில் கனிந்து கண்ணில் ஒளிரும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
கண்ணில் தோன்றி காமத்தில் எரியும்
தீயொன்று உண்டே

முடிவில்,

தீயென்று ஒன்று இங்கு உண்டே.

Wednesday, October 18, 2006

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்...

இது ஒரு புது விடியல்!