Tuesday, June 10, 2008

பொன் - முற்று பகுதி

அரவம் எழுந்தது மாணிக்கம் கக்கியது!
உள்ளத்தே செம்மை பிறந்தது!
மாலை மனதோடு இயைந்தது!

ஆகா!
இது ஞான வானிடை சுரக்கும் அமுத ஊற்று!
ஆகா!
இது உள்ளத்திற் பிறந்து உலகத்தே விரிந்த
கவியின் கற்பனை!
ஆகா!
இது படைப்புக் கோலத்தில் பராசக்தி இடும் செம்மண்!
ஆகா!
இது ஆகாயத்திடை கலக்கும் ஆலய மணியோசை!
ஆகா!
இது தவச் சிவன் மேல் அனங்கன் எய்த ஆனந்த பாணம்!

மாலையே! மதன வடிவே!
மோகனமாய்ச் சிரிக்கும் பொற்சிலையே!
கையிரண்டில் சேர்க்க முடியா புதையலே!
கண் மூடி உன்னைக் கலக்கிறேன்!
இனி
என் மனமெல்லாம்
பொன்! பொன்! பொன்!
ரசம்! ரசம்! ரசம்!

Monday, June 09, 2008

பொன் - பகுதி முன்று

தளையனைத்தும் உடைந்தது
தங்கம் தரணி மக்கள் முகமெங்கும் மலர்ந்தது
வினையும் பயனும் இன்பத்தே இணைந்தன
தென்றல் தேர் ஏறி வலம் வந்தாள்
கலகம் கலக்கம் குழப்பம் இல்லா
பரசிவக் குளத்தில்
பராசக்தி கல்லொன்று எறிந்தாள்
படைப்பு பிறந்தது

அழகுக் கடல் ஆசை அலையால்
ஆயிரம் முறை சிவன் நெஞ்சில் அறைந்தாள்
மீண்டும் மீண்டும் தோள் தழுவி
கலவி கற்று களித்தாள்

புள்ளெல்லாம் பயன் பெற்று
பிறவி நீங்கி
பொன்னம்பல கூட்டிற்கெய்தின
உலகெல்லாம் உய்வுற்று
காரணம் காரியம் கருத்தொன்றிலாத
இன்ப சோதியாய் மலர்ந்தது

உள்ளப் பாற்கடலில்
உறக்க நாக சயனத்தில்
உரைக்க முடியா சோதியவன்
அழகு
இன்பம்
ஆசை
என்னும் அலையோசையில்
மயங்கி
மன்மதக் கனவில் முழ்கி
காரணம் அழிந்த குருடனாய்
குறிக்கோள் கெட்ட செவிடனாய்
முயற்சியற்ற மூடனாய்
எம்முள் எரிந்தான்

Wednesday, June 04, 2008

பொன் - பகுதி இரண்டு

விசும்பின் விளிம்பில்
உருண்டு
திரண்டு
விம்மி
களியாய் காதலாய் கரும்பாய்
வழியாய் வேட்கையாய் வேதனையாய்
வனப்பாய் அழகாய் உருவாய்
நின்ற அத்துளி
ஐயத்தே ஒரு நொடி ஊசல் கொண்டது
மறு நொடி மனம் தெளிந்தது

விடுக்கென்று பாசம் விட்டு
பந்தம் அற்று
துன்பம் கொன்று
ஆசை வென்று
காமம் கடந்து
விண்ணின் வெளியில் வெடித்துச் சிதறி
மாலை
எனும் மதன ரூபமாய் பிறந்த்ததே
அம்மாவோ!
அமுதம் எங்கும் வழிந்ததே!

Monday, June 02, 2008

பொன் - பகுதி ஒன்று

ஆகாயம்
வெட்ட வெளிக்கெல்லாம் வெளி நின்ற வேள்விக் களம்
அண்ணாந்து பார்த்தால் தெரியும் ஆனந்தப் பிரவாகம்
கண் முடிப் பார்த்தால் தெரியும் கற்பக விருட்சம்
மோனம் எனும் பாலை முடிவின்றிச் சுரக்கும் காமதேனுவின் மடி இழுக்கின்ற முச்சின் பிறப்பிடம்
அண்டத்தை ஒன்றிப் படரும் மதன மல்லிகைக் கொடி

இவ்வானில் இங்கே ஒரு முலையில்
முளைத்ததொரு தங்கத் துளி
பரமனவன் பட்டறையில்
பதமாய் உருக்கி பாவைச் சிலையாய் வடிக்க வைத்த
பசும் பொன் திரளில்
திமிரி ததும்பி தப்பிய துளி
மிதமான ஒளி
கண்ணை மயக்கும் கதகதப்பு
தனத்தின் வனப்பு
என
கன்னியாய் காட்டு தேவதையாய்
காமக் களஞ்சியமாய்த் தோன்றிய
கதிரின் துளி

பகல் என்னும் தந்தையின் கைபற்றி
பருவ வெறியோடு நிற்கும்
இரவுக் காதலனை நோக்கித்
தடுமாறி நிற்கும் துளி
பந்தமும் பாசமும் பற்றி
ஆசையும் களியும் கண்டு
அன்னலிற் தவிக்கும் மானிடத் துளி