Thursday, November 20, 2008

வெற்றிச் சங்கெடுத்து விண்முட்ட ஊதுவீர் 
பற்றென்னும் பண்டைப் பிசாசறுத்தோம் 
விட்டென்னைப் போயிற்று வல்லுயிர்ப் பேய் 
தொட்டென்னைத் தழுவியது தூய மெய்யழகு

பேய் கொன்றோம் பொய்க் கவலைப் பிணம் தின்னும்
நாய் கொன்றோம் நொந்த நான் கொன்றோம் 
தாய் கொன்றோம் தாய் குடத்துச் சேய் கொன்றோம் 
நோய் கொன்றோம் நமன் வென்றோம் காணீரோ

இறந்திடுவோம் என்றொரு மொழி இனியும் கூறாதீர் 
பிறந்திட்டோம் பயன் பெறுவோம் பார்தனிலே 
அறஞ் செய்வோம் ஆனந்தம் பல அடைவோம் 
உரமேற்றி உள்ளத்தே தீ வளர்ப்போம்

சோதி தனைச் சேர்த்தொரு காதல் செய்வோம் 
ஆதி அரன் நாமே அன்னை அவளே அன்பால் 
ஓதி ஒன்றாவோம் உடலழித்து உயிர் வளர்ப்போம் 
மேதினியெங்கும் மலர்ந்திட்டக் காண்போம்

அறிவும் அழகும் அமுதக் குடமும் அலகில்லாது
எரியும் எண்ணத் தெளிவும் எழில்மிகு நிலவும் 
புரியும் விணையெல்லாம் புண்ணியமாய்ப் பொழியும் 
விழி கொண்டு வாழ்வெல்லாம் வளம்பெறச் செய்வோம்

வேள்வித் தீயிது நம் வாழ்க்கை உயிரின் 
வாளெடுத்து விணையென்னும் நோயறுப்போம் 
கோளில்லை குணமில்லை குற்றமேதுமில்லை 
நீள்கின்ற நினைவெல்லாம் நித்திய சோதியே

உள்ளம் நிலவாகும் உயிரெல்லாம் ஒளிக்குன்றாம் 
அள்ளக் குறையாத அமுதம் விண்ணெங்கும் 
வெள்ள்த் திரளாக உணர்வெல்லாம் பொங்கிடுமே 
தெள்ளத் தெளிவாக தரணியெல்லாம் தெரிந்திடுமே

Tuesday, June 10, 2008

பொன் - முற்று பகுதி

அரவம் எழுந்தது மாணிக்கம் கக்கியது!
உள்ளத்தே செம்மை பிறந்தது!
மாலை மனதோடு இயைந்தது!

ஆகா!
இது ஞான வானிடை சுரக்கும் அமுத ஊற்று!
ஆகா!
இது உள்ளத்திற் பிறந்து உலகத்தே விரிந்த
கவியின் கற்பனை!
ஆகா!
இது படைப்புக் கோலத்தில் பராசக்தி இடும் செம்மண்!
ஆகா!
இது ஆகாயத்திடை கலக்கும் ஆலய மணியோசை!
ஆகா!
இது தவச் சிவன் மேல் அனங்கன் எய்த ஆனந்த பாணம்!

மாலையே! மதன வடிவே!
மோகனமாய்ச் சிரிக்கும் பொற்சிலையே!
கையிரண்டில் சேர்க்க முடியா புதையலே!
கண் மூடி உன்னைக் கலக்கிறேன்!
இனி
என் மனமெல்லாம்
பொன்! பொன்! பொன்!
ரசம்! ரசம்! ரசம்!

Monday, June 09, 2008

பொன் - பகுதி முன்று

தளையனைத்தும் உடைந்தது
தங்கம் தரணி மக்கள் முகமெங்கும் மலர்ந்தது
வினையும் பயனும் இன்பத்தே இணைந்தன
தென்றல் தேர் ஏறி வலம் வந்தாள்
கலகம் கலக்கம் குழப்பம் இல்லா
பரசிவக் குளத்தில்
பராசக்தி கல்லொன்று எறிந்தாள்
படைப்பு பிறந்தது

அழகுக் கடல் ஆசை அலையால்
ஆயிரம் முறை சிவன் நெஞ்சில் அறைந்தாள்
மீண்டும் மீண்டும் தோள் தழுவி
கலவி கற்று களித்தாள்

புள்ளெல்லாம் பயன் பெற்று
பிறவி நீங்கி
பொன்னம்பல கூட்டிற்கெய்தின
உலகெல்லாம் உய்வுற்று
காரணம் காரியம் கருத்தொன்றிலாத
இன்ப சோதியாய் மலர்ந்தது

உள்ளப் பாற்கடலில்
உறக்க நாக சயனத்தில்
உரைக்க முடியா சோதியவன்
அழகு
இன்பம்
ஆசை
என்னும் அலையோசையில்
மயங்கி
மன்மதக் கனவில் முழ்கி
காரணம் அழிந்த குருடனாய்
குறிக்கோள் கெட்ட செவிடனாய்
முயற்சியற்ற மூடனாய்
எம்முள் எரிந்தான்

Wednesday, June 04, 2008

பொன் - பகுதி இரண்டு

விசும்பின் விளிம்பில்
உருண்டு
திரண்டு
விம்மி
களியாய் காதலாய் கரும்பாய்
வழியாய் வேட்கையாய் வேதனையாய்
வனப்பாய் அழகாய் உருவாய்
நின்ற அத்துளி
ஐயத்தே ஒரு நொடி ஊசல் கொண்டது
மறு நொடி மனம் தெளிந்தது

விடுக்கென்று பாசம் விட்டு
பந்தம் அற்று
துன்பம் கொன்று
ஆசை வென்று
காமம் கடந்து
விண்ணின் வெளியில் வெடித்துச் சிதறி
மாலை
எனும் மதன ரூபமாய் பிறந்த்ததே
அம்மாவோ!
அமுதம் எங்கும் வழிந்ததே!

Monday, June 02, 2008

பொன் - பகுதி ஒன்று

ஆகாயம்
வெட்ட வெளிக்கெல்லாம் வெளி நின்ற வேள்விக் களம்
அண்ணாந்து பார்த்தால் தெரியும் ஆனந்தப் பிரவாகம்
கண் முடிப் பார்த்தால் தெரியும் கற்பக விருட்சம்
மோனம் எனும் பாலை முடிவின்றிச் சுரக்கும் காமதேனுவின் மடி இழுக்கின்ற முச்சின் பிறப்பிடம்
அண்டத்தை ஒன்றிப் படரும் மதன மல்லிகைக் கொடி

இவ்வானில் இங்கே ஒரு முலையில்
முளைத்ததொரு தங்கத் துளி
பரமனவன் பட்டறையில்
பதமாய் உருக்கி பாவைச் சிலையாய் வடிக்க வைத்த
பசும் பொன் திரளில்
திமிரி ததும்பி தப்பிய துளி
மிதமான ஒளி
கண்ணை மயக்கும் கதகதப்பு
தனத்தின் வனப்பு
என
கன்னியாய் காட்டு தேவதையாய்
காமக் களஞ்சியமாய்த் தோன்றிய
கதிரின் துளி

பகல் என்னும் தந்தையின் கைபற்றி
பருவ வெறியோடு நிற்கும்
இரவுக் காதலனை நோக்கித்
தடுமாறி நிற்கும் துளி
பந்தமும் பாசமும் பற்றி
ஆசையும் களியும் கண்டு
அன்னலிற் தவிக்கும் மானிடத் துளி

Tuesday, April 22, 2008

கேள்வியின் நாயகியே

கண்மணியே காதலியே காத்திருக்கும் கவிக்குயிலே
கண்ணினிலே கேள்விதனை கூட்டி வைக்கும் காரிகையே
என்னைவிட்டு எங்கெய்தினாய் யாதியற்றினாய் என்று
கண்ணினிலே கேள்விதனை பூட்டி வைக்கும் பேரழகே

கேள்!

பொன்னமுதாய் பொழிந்திடும் ஓர் தனலைக் கண்டேன்
விண்ணதனைத் தழுவி நிற்கும் விருட்சம் கண்டேன்
எண்ணமெல்லாம் ஏற்றம் செய்யும் ஒளியக் கண்டேன்
கன்னமிரண்டும் சிவந்த வான் பெண்ணைக் கண்டேன்

கூட்டிற்கே விரைந்த்தோடும் சிட்டுக் குருவிகள்
கூட்டு சேர்ந்த்தே விளையாடும் சுட்டிச் சிறுமிகள்
தீட்டுகின்ற கதிரால் சிவந்த குட்டி அருவிகள்
காட்டுகின்ற மாலைப் பொழுதில் எல்லாம் கண்டேன்

விந்தை ஓராயிரம் வானில் கண்டேன்
சிந்தை சேர்ந்திடும் சத்தியம் கண்டேன்
முந்தைக் கவிஞன் மூத்த கம்பன் உவமை
இந்த மாலைப் பொழுதில் மலரக் கண்டேன்

காணுகின்ற பொருளிலெல்லாம் பெண்ணழகே என்னவளே
தோன்றுகின்ற காட்சியொன்றே என்றெண்ணித் தெளிந்த்தேன்
நாண்கின்ற வான்மகளை மீண்டும் கண்டேன்
தேனிறங்கும் நின்னழகை நாடி ஓடி வந்த்தேன்