Thursday, November 20, 2008

வெற்றிச் சங்கெடுத்து விண்முட்ட ஊதுவீர் 
பற்றென்னும் பண்டைப் பிசாசறுத்தோம் 
விட்டென்னைப் போயிற்று வல்லுயிர்ப் பேய் 
தொட்டென்னைத் தழுவியது தூய மெய்யழகு

பேய் கொன்றோம் பொய்க் கவலைப் பிணம் தின்னும்
நாய் கொன்றோம் நொந்த நான் கொன்றோம் 
தாய் கொன்றோம் தாய் குடத்துச் சேய் கொன்றோம் 
நோய் கொன்றோம் நமன் வென்றோம் காணீரோ

இறந்திடுவோம் என்றொரு மொழி இனியும் கூறாதீர் 
பிறந்திட்டோம் பயன் பெறுவோம் பார்தனிலே 
அறஞ் செய்வோம் ஆனந்தம் பல அடைவோம் 
உரமேற்றி உள்ளத்தே தீ வளர்ப்போம்

சோதி தனைச் சேர்த்தொரு காதல் செய்வோம் 
ஆதி அரன் நாமே அன்னை அவளே அன்பால் 
ஓதி ஒன்றாவோம் உடலழித்து உயிர் வளர்ப்போம் 
மேதினியெங்கும் மலர்ந்திட்டக் காண்போம்

அறிவும் அழகும் அமுதக் குடமும் அலகில்லாது
எரியும் எண்ணத் தெளிவும் எழில்மிகு நிலவும் 
புரியும் விணையெல்லாம் புண்ணியமாய்ப் பொழியும் 
விழி கொண்டு வாழ்வெல்லாம் வளம்பெறச் செய்வோம்

வேள்வித் தீயிது நம் வாழ்க்கை உயிரின் 
வாளெடுத்து விணையென்னும் நோயறுப்போம் 
கோளில்லை குணமில்லை குற்றமேதுமில்லை 
நீள்கின்ற நினைவெல்லாம் நித்திய சோதியே

உள்ளம் நிலவாகும் உயிரெல்லாம் ஒளிக்குன்றாம் 
அள்ளக் குறையாத அமுதம் விண்ணெங்கும் 
வெள்ள்த் திரளாக உணர்வெல்லாம் பொங்கிடுமே 
தெள்ளத் தெளிவாக தரணியெல்லாம் தெரிந்திடுமே

1 comment:

Anonymous said...

Most beautiful. Most divine - the brilliant poem's effect on me is pure spiritual completeness.

Am quite overwhelmed after reading this, and also at your immeasureable talent that is congruent with your deep devotion for the Divine Mother.