Saturday, October 08, 2016

நீ எங்கே?

அம்மா நீ எங்கே?
அழகான
அம்மா நீ எங்கே?
அழுகின்றேன்
அம்மா நீ எங்கே?

கண்ணே நீ எங்கே?
நான் ஈன்ற
கன்றே நீ எங்கே?
அழுவாயே
கண்ணே நீ எங்கே?

குளிரிடுதே பயம் வருதே
பசித்திடுதே
அம்மா பசித்திடுதே பால் கொடுக்கும்
அம்மா! அம்மா! நீ எங்கே?

குளிரிடுமே! பயம் வருமே!
பசித்திடுமே!
ஐயோ பசித்திடுமே! பால் குடிக்கும்
கன்றே! என் கண்ணே! நீ எங்கே?

கொஞ்சும் குரல் எங்கே? குழைந்து எந்தன்
முகம் நக்கும் நாவெங்கே? பால்
மண்டும் மடியெங்கே? அம்மா!
அம்மா! நீ எங்கே?

குட்டிக் கொம்பேங்கே? கொம்பின் நடுவிருக்கும்
சுட்டிச் சுருள் எங்கே? மடியை
முட்டிப் பால் குடிக்கும் கண்ணே! என்
குட்டிக் கன்றே! நீ எங்கே?

அசுரன் அடிச்சானோ? அரக்கன் புடிச்சானோ?
அம்மா நான் வரவோ உன்னைக் காப்பாத்த?
ஐயோ முடியலையே அடியும் எடுத்து வைக்க
அம்மா நீ எங்கே? அம்மா நீ எங்கே?

அசுரன் யாருமில்லை. அரக்கன் எவனுமில்லை.
கண்ணே உன்னைக் கொல்லும் கம்சன் கொடும்பாவி
பசுவின் பால் திருடும் மனுஷப் பேய் தானே,
கண்ணே நீ எங்கே? கண்ணே நீ எங்கே?

அம்மா நீ எங்கே?

கண்ணே நீ எங்கே?

No comments: