Thursday, March 24, 2016

சட்டைப் பையில் செத்த சாமிகள்

செங்குருதியில் ஓர் செய்யுள் வடித்தேன்
ஸ்ரீராமன் செத்து மடிந்தான் சூர்ப்பனகையின் மடியில்
கற்பிழந்து களவறிந்து கலவி கூடி.
சீதையோ வனம் ஆண்டாள்
வீடமைத்தாள் விறகொடித்தாள் வினை செய்தாள்
மாலையிலே இசை பயின்றாள் இலங்கேசன் வீணையிலே.

கரு மையில் ஓர் கவிதை செய்தேன்
கண்ணனவன் கோகுலம் விடான்
போர் புரியான் புவியாளான் சூதறியான்
காலைகள் மாட்டுக்கு மதியமோ பாட்டுக்கு
இரவானால் இராதையின் ஈரடிக்குத் தலையணை.
மூப்பெய்தி மதி மழுங்கி பெயரின்றி புகழின்றி
இனிதே இறந்தான் இடைச்சி மகன்.

பசுமை தோயப் பாட்டொன்று படித்தேன்
பரமசிவன் பலசரக்குக் கடை வைத்தான்
பல்லுலகமும் படைத்தழிக்கும்
பராசக்தி பக்கத்து வீட்டில் பல்லிளித்துக் கடன் வாங்கினாள்
பிள்ளைகள் இரண்டும் படித்து ஆளாக வேண்டுமே.
ஆனால் படிப்பில் குறியில்லை பிள்ளைகளுக்கு
மூத்தவனுக்குச் சோறு இளையவனுக்குக் காதல்.

நீர் உன் கடவுள்
பெயரால் கும்பிடுங்கள்
கோவில் கட்டுங்கள்
கொலை செய்யுங்கள்

நான் என் எழுதுகோலை மூடி வைத்தேன்
முப்பத்து முக்கோடி சாமிகளும் மாய்ந்து போயினர்
எல்லாம் என் சட்டைப் பையில்.

In English 

No comments: