Friday, October 14, 2016

மீனாட்சி தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

மீன்விழியே மரகதமே மாமதுரை நாயகியே
தேனே தேன்மொழியே தேன் ஒழுகும் பூவிதழே
தேன் ஒழுகும் பூவிதழே தென்மதுரை நாயகியே
நான் எழுதும் தமிழ் கேட்டு கண்மணியே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

கண்மணியே கண்ணுறங்கு கற்பகமே கண்ணுறங்கு
தென்மதுரை ஊராளும் சின்னவளே கண்ணுறங்கு
சின்னவளே தென்னவளே என்னவளே என்னுயிரே
பண்ணெடுத்து நான் பாட பால் நிலவே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

பால் நிலவே பனிமலையே பாம்பிருக்கும் சடை முடியே
ஆலிலையில் மிதந்து வரும் மாலவனின் பூந்தங்காய்
மாலவனின் பூந்தங்காய் மாவிலையின் நிறமுடையாய்
கோலத்தமிழ் நான் பாட கள்ளழகே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

கள்ளழகே சொல்லழகே நள்ளிரவின் நிலவழகே
கள்ளிருக்கும் கண்ணழகே சொல்லழியும் சிலையழகே
சொல்லழியும் சிலையழகே பிள்ளைத் தமிழ்ப் பாட்டழகே
பிள்ளைத் தமிழ் நான் பாட கிளியழகே கண்ணுறங்கு

கிளியழகே கொடியழகே புதுகுத்துவிளக்கழகே
விளையாடும் வைகையிலே களியாடும் நீரழகே
களியாடும் நீரழகே கோலோச்சும் அரசழகே
தாலாட்டு நான் பாட மீன்விழியே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

No comments: