Wednesday, August 27, 2014

ஆறு


புவிஎன்னும் சிறுதுளை துவங்கிக்  கசிந்து
வளியென்னும் வான் அமைந்த நிலமெல்லாம் நடந்து நெஞ்சத்துக்
குழியென்னும் கரையோடு ஓடி கரையெல்லாம்
கவியென்றும் கதையென்றும் வளம்பெறச் செய்து வெட்ட
வெளியென்னும் ஆழி சேர்ந்து அமைதியில் அமையும்
வளியென்னும் உயிர்மூச்சும் நமக்கொரு ஆறாமே.

In English - http://agnibarathi.blogspot.in/2014/08/river-called-breath.html

Thursday, August 07, 2014

வரலட்சுமி விரதப் பாட்டு


வர வேண்டாம் வரலட்சுமி நீ வர வேண்டாம்  வந்து
வரமொன்றும் தர வேண்டாம் அம்மா தர வேண்டாம் 

தர வேண்டாம் தரணியிலே செல்வமும் புகழும் எனக்கு 
வர வழியேதும் செயல் வேண்டாம் வரலட்சுமி நீ (வர வேண்டாம்...)

வரம் வேண்டிக் காத்திருப்போர் பலருண்டு பரந்த இத் 
தரணியிலே அவரிடம் போய் நீயுன் அருள் மலர்க் 
கரம் நீட்டிக்  கனிவோடு அருள் புரிவாய் தாயே உனக்குமது 
அறம் செய்யும் வழியாகும் உய்வும் உண்டாகும் எனவே (வர வேண்டாம்...)

வரம் வேண்டாம் வரமொன்று நான் வாங்கி விட்டேன் என்றும் 
சரண் என்று சக்தியவளை நம்பிவிட்டேன் இனியிங்கு எனக்கு 
மரணமே வந்தாலும் வரமாகுமன்றோ மாற்றெதுமுண்டோ அரி 
அரனுக்கும் மேலான வரமிதுவன்றோ எனவே (வர வேண்டாம்...)

In English - http://agnibarathi.blogspot.in/2014/08/a-song-for-varalakshmi-viratham.html

Wednesday, May 21, 2014

நாய்ச் சண்டை

நிலமுனதே தூனாகி நின்ற கல்லுனதே
பலவாய்க் கொன்ற மரமுன் சேயே காட்டின்
களத்தில் கொன்று விரட்டிய விலங்கும் உன் அன்பே
அங்கே

பலவாய் ஆலயம் செய்து பகை கொண்டு கொலைக்
களமாய் நிலம் செய்து மாக்கள் தாம் மாய்ந்தனரே

பிறை சூடும் பிச்சைப் பெருமானே பித்தனே
இறையறுக்கும் புலையன் இருதுண்டு எரிய
குரைக்கும் நாய்கள் தாம் சண்டையிட்டால்
உறைக்கவோர் முறையேது? முடிவேது?

English - http://agnibarathi.blogspot.com/2014/05/dogs-quarrel.html


Saturday, May 03, 2014

ஏன்


இறைவன் ஒருவன் நானறிவேன்
மறைவாய் உரைவதவன் என் மனத்தே
மறையும் ஒன்றே நானுரைப்பேன்
நிறைவாய் நின்றதோர் அமைதியிலே

ஒன்றே தொழுகை நானும் புரிவேன்
என்றும் வாழும் வாழ்க்கையதுவே
ஒன்றேயமுதம் நான் பெரும் பரிசு
நன்றாய்ப் பொழியும் கவி  என்னும்தேன்

இறைவன் ஒருவன் ஒன்றாயிருக்க
அறியாக் கல்லும் மலரும் பெயர்த்து
முறையாய்க் கோவில் தொழுகை செய்து
பிரிப்பேன் ஏனோ என்னிடம் அவனை

ஆங்கிலத்தில் - http://agnibarathi.blogspot.com/2014/05/why.html

Monday, April 28, 2014

என்னவர்


நீரில் நீந்தும் மீன் என் உறவே
நானும் கருவில் நீந்தியதாலே

ஊறும் தவழும் உயிர் யாவும் உறவே
மண் மேல் நானும் ஊறியதாலே

நாற்கால் நடக்கும் விலங்கெல்லாம் நட்பே
தவழ்ந்து தவழ்ந்து தேடியக் காலே

இருகால் நாரை குரங்கும் எமதே
இன்றும் நான்புவியில் நடப்பதாலே

நொடியில் இறக்கும் ஈசலும் உறவே
என் இமையிரண்டும் இமைப்பதாலே

பறந்து திரியும் புள்ளெல்லாம் தோழர்
தமிழொடு என்மனம் பறப்பதாலே

கதிரைக் குடிக்கும் செடிகொடி உறவே
தவத்தில் நான் கதிர் அருந்தியதாலே

தவத்தில் நிற்கும் நெடுமரம் கேளிர்
என்கதை தவமே கனியும் பாரீர்

நீள்கடல் மலைநதி யாவும் என்கூட்டம்
என்றும் என்கவி இசைப்பதாலே

எல்லாம் எல்லாம் எல்லாம் என் உறவே - இனியும்
என்தாய் என்சேய் என்னவர் என்ற
எண்ணமுமேதே?

In English - http://agnibarathi.blogspot.hk/2014/04/my-clan.html

Tuesday, August 20, 2013

காயத்ரி ஜபம்


இடக்கண் திறந்து இறந்த காலம் நோக்கி
இயம்புவன் அவளை நினைவாய் நினைத்து

வலக்கண் திறந்து வாழும் காலம் நோக்கி
வணங்குவன் அவளை அறிவாய் அறிந்து

நடுக்கண் திறந்து நாளை நோக்கி
நாடுவன் அவளை கற்பனை அமைத்து

முக்கண் திறந்து முடிவில்லாக் காலத்திணைந்த
மூவுலகும் கண்டு துதிப்பேன் அவளை சக்திஎனப் பாடி

முக்கண் மூடி மனத்தேயொன்றி முக்காலம் மறைந்து
எக்காலமும் ஏற்றுவன் அவளை நான் எனும் பெயரால்

In English - http://agnibarathi.blogspot.in/2013/08/gayatri-japam.html

Tuesday, June 25, 2013

செய்க வினை


செய்க விணை செய்க விணை செய்க விணை செய்கவே - என்றும்
தோய்வின்றி சோர்வின்றி துயர் நீங்க துணிவோடு தவமாக (செய்க)

பொய்யுரையோம் புறம் பேசோம் பயமழிப்போம் விணை செய்தால்
உய்வடைவோம் உயர்வடைவோம் உயிர் வாழ்வோம் எனவே என்றும் (செய்க)

விணையல்லால் இங்கு நமக்கோர் வழியில்லை வாழ்வில்லை
விணை செய்தால் நமக்கென்றும் வலியில்லை சாவில்லை நமக்குத்
துணை நாமே நம் விணையே அவளுரைக்கும் நல்விணையே எனவே
திணையே ஆனாலும் துயர்  நீங்க  துணிவோடு தவமாக (செய்க)

தவமாகும் செய்த வினை தாயவள் துணையிருந்து தவத்திற்கு
வரம் தருவாள் வழியுரைப்பாள் விணை தீர்ப்பாள் வளம் செய்வாள்
அறத்தொடு அன்பும் அழகும் அகத்தே கொண்டு அயராது விணை செய்தால்
அவள் அருள் புரிவாள் அகத்திருப்பாள் அணைத்திருப்பாள் எனவே (செய்க)

Monday, April 29, 2013

கல்யாணி



In plain text

யாம் யார் ஏன் வந்தோம் எங்கு செல்வோம் என்பதறியா

யாம் யாமே வந்து விட்டோம் செல்லவும் செய்வோம்
என உரைத்து ஓம் இஃதே வழி  இஃதே என உணர்வாயா

யாம் படைத்த மகனே எனைப் படைக்கும் படைப்பே
பேறு பெற்றிட்ட பரசிவக்குளத்தில் மூழ்கி உரைப்பாயா

யாம் இஃதே ஏற்றும் ஓம் இஃதே யாம் இஃதே ஏற்றும் ஓம் இஃதே

யாம்

ஓம்

பி.கு: 

1. கவிதையை செப்பனே வரைந்திட பல முயற்சி மேற்கொண்டு கை வலிக்க எழுதிய வைதேஹிக்கு பல நன்றிகள்!

2. கவிதையின் தலைப்பு "கல்யாணி" என அமையும் காரணம் அறிய படிக்க https://en.wikipedia.org/wiki/Temple_tank

Monday, March 25, 2013

பித்தன் (பட்டன்) கதை




திருக்கடவூரில் சுப்ரமணியம் என்றொரு பித்துப் பிடித்த அந்தணன் வாழ்ந்து வந்தான்.

அவனுக்கு பெரும்பாலும்,

கண் காணாது.
செவி கேளாது.
வாய் பேசாது.

எப்பொழுதும்,

நா சுவைக்காது.
நரம்பு உணராது.

இப்படியிருந்த இந்த அந்தணனை

எள்ளுதலும்
நகையாடுதுலம்
கேலி பேசுதலும்

ஊர் வழக்கு.

இது எதுவும் அறியாத அவன்

நாளும்
பொழுதும்
காலமும்

மறந்து

நிலத்திலும்
நீரிலும்
நெருப்பிலும்

ஒரு பொருள் மட்டுமே அறிந்திருந்தான்.

ஒரு பொருள் மட்டுமே அறிந்திருந்தான், அதனால் அதனை மட்டும் கண்டிருந்தான்.

ஒரு பொருள் மட்டுமே கண்டிருந்தான் அதனால் அதனை அவன் விண்டாதிருந்தான்.

அவ்வண்ணம் கண்டும் கண்டதை விண்டிலாதும் இருந்த அப்பித்தனை

மராத்த  மன்னர்,
தஞ்சை கொண்ட தரணியரசர்,
வீர சிவாஜி வழி வந்த வீர வேந்தர்,
கலை வளர்த்த காவலர்,
நூலகம் தந்த நாவலர்,
பகைவர் அஞ்சும் பகலவர்

காண நேர்ந்த்தது. பித்தன் என பலரும் ஏசும் இம்மனிதன் பயமின்றித் தன வழியே  இருத்தல் கண்டு,

"யார் இவன்? எவறிவார்? எவருரைப்பார்?"

என வினவ, கூடியிருந்த மக்காள்,

பித்தன்
பெருமான்
புலவன்
பக்தன்

என் பல கூறினர். குழம்பிய மன்னன், பித்தனிடமே,

"யார் நீர்?", என வினவினார்.

.
.
.

மீண்டும், "பெயர் என்ன?" என் வினவினார்.

.
.
.

பின்னரும், "ஏதும் அறிவீரோ?" என்றும் வினவினார்.

.
.
.

கடைசியில், "இன்று திதி யாது?" என்று வினவினார்.

அது வரை,

கண்டும்
கேட்டும்
பேசியும்

இராத பித்தன்

கண்டான்.
கேட்டான்.

'முழுமதியோன்றே! முழுமதியோன்றே! முழுமதியோன்றே!' என்று பேசினான்.

'இருட்டில் நிலவினைக் கண்டீரோ. பித்தன் தாம் போலும். முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக' என்று  நகைத்து மன்னன் நகர்ந்தான்.


அது வரை,

கண்டும்
கேட்டும்
பேசியும்

இராத பித்தனுக்கு,

கண்டதும்
கேட்டதும்
பேசியதும்

பொய் எனத் தோன்றவில்லை. வாள் கையில் ஏந்தி, அன்னை முன் சென்று

"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"

என இடையறாது மனதிற் துதித்தான்.

துதியினூடே பித்தம் சித்தத்திலேறி பாட்டு பலவும் படித்தான்.

பாட்டினூடே பரசக்தியவள் அவன் முன்னே தோன்றினாள்.

"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"
"முழுமதியின்றேல் உம் முகமதி கொய்து நிலவு  செய்வீராக"

என்று சொன்னவன்,

"முழுமதி கண்டேன்! முகமதி கண்டேன்!"
"முழுமதி கண்டேன்! முகமதி கண்டேன்!"
"முழுமதி கண்டேன்! முகமதி கண்டேன்!"

எனக் கூவினான்.

அதன் பின்னர் அவன் பிதற்றிய பாடலைப் புகழ்ந்தனர் பலர்.
அவன் பாடிய அன்னையைப் புகழ்ந்தனர் பலர்.
அவனை ஏசிய மன்னனை ஏசினர் சிலர்.

நிலவு வந்ததா? அம்மாவாசை இரவு பௌர்ணமி ஆனதா? பித்தன் கூற்றை பராசக்தி பலிக்கக் செய்தாளா?

பராசக்தியைக் கண்ட பின் பித்தனுக்கே அதில் அக்கறை இல்லை.

நமக்கேன்?


பாட்டின் புகழ்


வையத்து மாந்தர்காள் கேளீர்
வையத்தில் உண்டு வாழ வைக்கும் அமுதமொன்று!

சிந்தைதனை மத்தாக்கி ஆசைக் கடலிடை
சித்தமதை அரவமாய்க் கட்டி
இன்பமோர் புறம் துன்பமோர் புறம் பற்றி
பற்றற்ற அகத்தினிலே பரமனையிருத்தி

பல காலம் இழுத்தோர் வேள்வி செய்தால்...

விடம் தோன்றும்! ஆலகால விடம் தோன்றும்!
மிடிமையும் அச்சமும் சோர்வும் கவலையும் கலந்த
விடம் தோன்றும்! ஆலகால விடம் தோன்றும்!

அதனை

அப்படியே அருந்தி அகத்திலே இருத்தி
அமைதியாய் பொருத்தி அசையாது கொண்டால்

அமுதம் தோன்றும்! ஆம்! ஆம்!
அமுதம் தோன்றுமே! ஆகா!
அது நித்தம் தோன்றுமே!
இங்கும் அங்கும் தோன்றுமே!
அமுதம்
இன்றும் என்றும் தோன்றுமே!

அமுதத் தமிழ் கவிதையது ஆசைக் கடல் அடியிருந்து
அழகாய் அறிவாய் இசையாய் சொல்லாய் பொருளாய்
கருத்தென்னும் கலசத்திலே காதலென்னும் கன்னியவள் ஏந்தி வர

அமுதமது  தோன்றுமே!
பாட்டென்னும் அமுதமது தோன்றுமே!
நாம் பழுதின்றி பருகிடப பல்சுவைப்
பாட்டென்னும் அமுதமது

அரியவன் அன்னையாய் அன்னையே அப்பனாய்
அழகென்னும் மோகினியாய் நமக்கு மட்டுமே
பகிர்ந்துப் பருகிடத் தர
பராசக்தியவளைக் கண்டப் பரவசமாய்
பாட்டெனும் அமுதமது பழுதின்றித் தோன்றுமே!

அதனைப் பருகி பருகி
பரவசமாகி
சொல்லிழந்து
பொருளிழந்து
அறிவிழ ந்து
கருத்திழந்து
சித்தமிழந்து
தன்னையே தானிழந்து
கண் திறந்து பார்த்தால் எல்லாம்

ரசம்! ரசம்! ரசம்!

Thursday, January 24, 2013

திண்ணம்



அன்றொரு நாள் இளமைத் தீயில்
சுட்டெரித்தேன் பற்பல வாச மலர்களை

மல்லிகைக் காதல்
செம்பருத்தி மோகம்
தாமரை அறிவு

இன்று வயது கூடுகிறது
எழுத்தாணி முனையில்
பழஞ் சாத்திரத்தின் பனையோலைகள்
எரிந்து சாம்பலாகின்றன

எது எப்படியோ
எரித்தல் திண்ணம்
எரிவதும் திண்ணம்

In English - http://agnibarathi.blogspot.in/2013/01/destiny.html


Saturday, January 05, 2013

வரம் தாரும்


பிறக்கும் வரம் தாரும் பெம்மானே - மீண்டும்
பிறக்கும் வரம் தாரும்

இறப்பும் இனிமையே நீர் படைத்த உலகில்
சிறப்பும் செல்வமும் சுடர் தரும் கதிரும்
துறவும் துயிலும் துன்பமும் துயரும்
பரவும் நின் படைப்பில் மீண்டும் (பிறக்கும் வரம்...)

நெல் நட்டு நல்லரிசி பயிர் செய்யும் உழவனாய்
சொல் நட்டு சுடரோடு விளையாடும் புலவனாய்
தொல்  கடலில் துணிந்தோடி திரிவியம் தேடு வணிகனாய்
அல்லலும் அமைதியும் அமுதென பலவாறு அள்ளிக் குடிக்க (பிறக்கும் வரம்...)

முக்தியொன்றும் தேவையில்லை முக்தியொன்றும் தேவையில்லை
சித்ததிற்கொர் விருந்தாம் சாகா மருந்தாம் வாழ்விதனில் பரா
சக்தியவளும் தேவையில்லை செந்தமிழ்ப் பாட்டதனின்
தித்திப்பே போதும் பாடல் செய் புலவன் பெயர் தேவையில்லை

எனவே

பிறக்கும் வரம் தாரும் பெம்மானே - மீண்டும்
பிறக்கும் வரம் தாரும்

Tuesday, November 20, 2012

மணம்


இரவென்னும் மங்கைக்கோர் வாசமுண்டு - அவள்
கரம்பற்றி கட்டியிழுத்து முகர்ந்து பார்த்தால்
தெரியும் அது மௌனமென்று

In English

புட்ட கவி


நீர் ஒன்றும் பெரிய கவியல்ல குவெம்பு அவரே
சீர் துங்கை நதியோட சிட்டுக் குருவி விளையாட
கார் மேகம் கானகத்தே கதை பேசி களியாடும்
குப்பள்ளி தனில் பிறந்தால்
நான் கூட நயமாய்த் தான் கவி படைப்பேன்.


Monday, October 29, 2012

மூன்று அக ஹைக்கூகள்


திணை - முல்லை

துறை - பிரிவின்கண் வருந்தி அது குறித்து மறைவாக தலைவி தலைவனுக்கு கூறியது

காத்திருப்பேன் காலமுண்டு
இவ்வந்தியில் துணைவர் மூன்று
கார்மேகம் கருமுல்லை கொஞ்சம் தனிமை

திணை - குறிஞ்சி

துறை - புணர்தல் வேண்டி பலமுறை நாடிய தலைவனிடம் தலைவியின் பதிலை தோழி கூறியது

கார்மேகம் தழுவும் கொல்லிமலை தனிலே
காரிருள் பொழியும் குளிரருவி அருகே
குறிஞ்சிப் பூ பறிக்கக் சென்றாள்

திணை - பாலை

துறை - பணி முடிந்து மனை திரும்பும் தலைவன் வழியின் இயல்பு கண்டு வருந்தி தலைவிக்கு அனுப்பிய சிற்றோலை

மரமில்லா நெடுஞ்சாலை
மனமெல்லாம் வெறும் சோலை
எரும்பான நான் பிழைத்தால் மனை சேர்வேன்

விளக்கம் இங்கே

Sunday, October 14, 2012

கறை

மஞ்சம் மீது மழையெனப் பொழிந்து
கொஞ்சும் இரவொடு கலவிகே கலந்த
நெஞ்சம் நெகிழ்ந்த நெடுவானத் துகில் மேல்
மஞ்சள் கறையாய் மருவினன் கதிரோன்

English

Sunday, October 07, 2012

இராவண மகாத்மியம்


நோக்கின் எத்துனை அழகிந்த இராவணன்
ஆர்க்கும் அலைகடல் சுழிலங்கையின் காவலன்

பொன்மகுடமது பகலவன் என பொழிதல் காண்
தண்மேகமெனத் தான் கருத்த முகம் மீது
பொன்மகுடமது பகலவன் என பொழிதல் காண்
மின் எனப் புன்னகை காண் நகைத்தால் பேரிடி கேள்

மின் எனப் புன்னகை காண் நகைத்தால் பேரிடி கேள்
திண் எனத் தினவெடுத்த தோள்மலை மேல் உருண்டோடும்
மின் எனப் புன்னகை காண் நகைத்தால் பேரிடி கேள்
திண் எனத் தினவெடுத்த தோள்மலை ஈரிமயம் காண்

பொருமிப் பொங்கி பின் விழுந்தெழும் பேரலை பார்
இரும்பெனும் நெஞ்சில் ஈராயிரம் எண்ணமாய் வண்ணமாய்
அருமைப் பொன் மகுடத்தால் அருநீர் பருகும் மேகத்திற்கு நீர் தரப்
பொருமிப் பொங்கி பின் விழுந்தெழும் பேரலை பார்

பச்சைப் பட்டுடை போர்த்திய இடை என்ன வளமோ
இச்சையோடு அசைந்தாடும் இளநெல்லைப் போலே
இச்சையோடிவன் கருமுகம் பொழியும் எழில் மழையருந்தி
இச்சையோடு அசைந்தாடும் இடை என்ன வளமோ

வெள்ளி மின்னும் வாள் வெட்டுவதைக் காண்
துள்ளியோடும் நதியாய் தாவி எங்கும் இடை தனிலே
அள்ளித் தெளித்த நெல்லாய் ஆழகுப் பட்டாடை தனை
வெள்ளி மின்னும் வாள் வெட்டுவதைக் காண்

உண்மையுரைப்போம் வெரூ*உம் மானிடன் அல்ல இவன்
மன்னுயிர் புரக்கும் மாலயன் இவன்
பண்டிதர் படிக்கும் புருஷசுக்தம் அதனின்று வந்த
மன்னுயிர் புரக்கும் மாலயன் இவன்

சொல்லும் இவ்வுலகில் சுடர் தரும் சூரியன் இவன்
புல்லும் பனிமலையும் ஒருங்கே போற்றும் புரவலனிவன்
வல்லுயிர் உலகே வடிவான இவன் எதிர் வெறும்
வில்லுடை வேடுவன் தான் இந்த இராமன்

* - Must be the elongated form of வல்லின று. But Google transliterate does not recognize it for some reason. பொறுத்தருள்க.

In English

Sunday, September 30, 2012

இறைவன் எனக்கோர் ஈசல்


I shall die again and again to know that life is inexhaustible. - Stray flowers, Tagore.

இறைவன் எனக்கோர் ஈசல்.
எல்லாம் வல்ல
இறைவன் எனக்கோர் ஈசல்.

எல்லாம் வல்ல இறைவன்
எனக்கு,

ஒரு நொடி பிறந்து
ஒளியிடம் பறந்து
மறு நொடி இறந்து
மறுபடி பிறக்கும்

ஈசல்.


எல்லாம் வல்ல இறைவன்
என் தலையில்

ஒரு நொடி பிறந்து
பாட்டாய் மலர்ந்து
மறு நொடி மறந்து
மறுபடி பிறக்கும்

ஈசல்.

எல்லாம் வல்ல இறைவன்

மீண்டும் மிண்டும்
ஒரு நொடி பிறந்து
ஒரு நொடி படர்ந்து
மறு நொடி இறந்து
பிறப்பைக் கடந்து
இறப்பை உணர்ந்து
ஒளியைக் கலந்த

ஈசல்.


எல்லாம் வல்ல
இறைவன் எனக்கோர் ஈசல்.


இறைவன் எனக்கோர் ஈசல்.


Thursday, December 29, 2011

வெற்றி மந்திரம்

ஓம்!


அறிவென்பது முதலே அதுவிருந்தால்
அணுவும் அண்டம்
இன்றேல்
அண்டமும் அமைதி

எனில்,

முதலில்,

அறிவது அறிக! அறிந்தபின்
அறிந்தவற்றில் தெளிவது தெளிக

தெளிந்தபின் தெளிந்தவற்றில்
குறிப்பது குறிக

குறித்தப் பின் குறித்தவற்றில்
குறையின்றி அனைத்தும் துணிக

துணிந்தபின் துணிந்தவற்றில்
முடிவது முடிக

முடிந்தபின் முடிந்தது மிஞ்சியது
எல்லாமே ஒளி

ஒளியினில் ஒன்றி
அனைத்தும் அழித்து
இருட்டில் இறந்து
இறப்பில் துயின்று
துயிலில் எழுந்து

தீறா இருளில்
தீயாய்த் தோன்றி
தாயானவளை நினைந்து

மீண்டும்...

அறிவது அறிக!

Sunday, August 28, 2011

மரணம்

பாட்டி பிணமாய்க் கிடக்கிறாள், பெட்டியில்.
பெரிதாய் துக்கம் ஒன்றுமில்லை.
முதிர்ந்த கனி, மரத்தை விட்டது.
சற்றே சிந்தித்தால்...

பெட்டியில் பிணமாய்க் கிடப்பது பாட்டியல்ல
வெறும் பிணம்.

பிணத்தை விடுக.
சுற்றும் மக்கள்.

பாட்டியின் மக்கள்,
மக்களின் மக்கள்,
யார் யாரோ பெற்ற மக்கள்.

பாட்டி பிணமாய்க் கிடக்கிறாள், பெட்டியில்
பக்கத்தில்

பேசிக் கொண்டு சிலர்
பேப்பர் படித்துக் கொண்டு சிலர்
சிரித்துக் கொண்டு சிலர்
அழுது கொண்டு பலர்

போன தீபாவளிப் புடவை பற்றி
பேசிக் கொண்டு சிலர்

இந்தத் தீபாவளி புதுப் படத்தைப் பற்றி
பேப்பர் படித்துக் கொண்டு சிலர்

நக்கல் நையாண்டி கருத்து மாற்றியபடி
சிரித்துக் கொண்டு சிலர்

'பொண்ணு மாட்டுப் பொண்ணு எல்லாம்
தலையை விரிச்கிகொங்கோ'
என்று ஐயர் சொன்னவுடன்
அழுது கொண்டு பலர்

நீட்டிய கால் தொட பெண்களுக்குள் போட்டி
கையில் காசு கொடுத்துத் தேய்தேடுக்க ஆண்களுக்குள் போட்டி
நெய்பந்தம் பிடிக்க பேரன்களுக்குள் போட்டி

நேற்று வரை
'பாட்டிய கூட்டிண்டு போங்கோ'
என்று சொன்ன மருமகள்
இன்று 'காட்டுக்கு எடுத்துண்டு போங்கோ' என்கிறாள்.
சொல்லி விட்டுக் வராத கண்ணீர் வரவழைத்து அழுகிறாள்.

சொல்லில் உள்ள தெளிவு, செயலில் இல்லையே அம்மா!

காட்டிற்குப் போகிறோம்.
சட்டி உடைத்து சடங்கு செய்து
சாத்திரம் சாவின் உண்மை தெளிய வைக்கிறது.
உண்மையை வார்த்தையில் புதைத்து
விக்கி விக்கி அழுகிறார்கள்.

மார்க்கண்டேயனுக்கு அருள் புரிகிறான் காலந்தகன்
கஜேந்திரனுக்கு மோட்சம் தருகிறான் நாராணன்

மேலே சுவற்றில், சித்திரத்தில்,
மார்க்கண்டேயனுக்கு அருள் புரிகிறான் காலந்தகன்
கஜேந்திரனுக்கு மோட்சம் தருகிறான் நாராணன்
சுற்றிலும் கீதை -
'உடம்புக்கு சட்டை, உயிர்க்கு உடம்பு'
என்று உன்னதம் உரைத்த கீதை.

கீழே, கணினியின் கருணையில்
பாட்டிக்கு வைகுண்டம் தருகிறான் அக்னிதேவன்.

எல்லோரும் அழுகிறார்கள்
சிவனைப் பார்த்து, அரியையும் பார்த்து
கீதை படித்து, போதித்து
தினமும் வேதாந்தம் பழகி
யாகம் செய்து விரதம் நோற்று
வைராக்கியம் வளர்க்கும்
பிராமணர்கள் எல்லாம்
அழுகிறார்கள்.

வீட்டுக்கு வருகிறோம்.

தண்ணீர்க் குளியல்
பொங்கல் ஆகாரம்
கண்ணீர் எங்கே போயிற்று ஐயா?

சிரிப்பு, வம்பு, சண்டை

சாப்பாட்டில் உப்பு,
உடம்பில் சர்க்கரை,
கடையில் சேலை
எது குறைவு எது உசத்தி என்று விவாதம்

சின்னப் பெண் பெரியவர்களிடம் பாட்டுப் பாடி
பாராட்டு வாங்குகிறாள், நாளை
பெண் பார்க்கும் சடங்கிற்கு ஒத்திகை பார்க்கிறாள்.

இரவு வருகிறது
விவாதம்.
அச்சிறிய வீட்டில்,
அப்பொழுது முளைத்த
ஐந்தாறு சிறிய அரசியல் கட்சிகளுக்குள்
நாளை சடங்கு குறித்து விவாதம்.

சோற்று விவாதம்.
சாத்திரம் எல்லாம்,
சோற்றில் துவங்கி
சோற்றில் அடங்குகிறது.

ஓரத்தில் விளக்கு
மெதுவாய் எரிந்து கொண்டிருக்கிறது.
பாட்டி பிணமாய்க் கிடந்த இடத்தில்
ஓரத்தில் விளக்கு
மெதுவாய் இறந்து கொண்டிருக்கிறது.

ஒரு கேள்வி
செத்தது யார்?
பாட்டியா?
சாத்திரமா?
மனசாட்சியா?