Tuesday, November 20, 2012

மணம்


இரவென்னும் மங்கைக்கோர் வாசமுண்டு - அவள்
கரம்பற்றி கட்டியிழுத்து முகர்ந்து பார்த்தால்
தெரியும் அது மௌனமென்று

In English

புட்ட கவி


நீர் ஒன்றும் பெரிய கவியல்ல குவெம்பு அவரே
சீர் துங்கை நதியோட சிட்டுக் குருவி விளையாட
கார் மேகம் கானகத்தே கதை பேசி களியாடும்
குப்பள்ளி தனில் பிறந்தால்
நான் கூட நயமாய்த் தான் கவி படைப்பேன்.


Monday, October 29, 2012

மூன்று அக ஹைக்கூகள்


திணை - முல்லை

துறை - பிரிவின்கண் வருந்தி அது குறித்து மறைவாக தலைவி தலைவனுக்கு கூறியது

காத்திருப்பேன் காலமுண்டு
இவ்வந்தியில் துணைவர் மூன்று
கார்மேகம் கருமுல்லை கொஞ்சம் தனிமை

திணை - குறிஞ்சி

துறை - புணர்தல் வேண்டி பலமுறை நாடிய தலைவனிடம் தலைவியின் பதிலை தோழி கூறியது

கார்மேகம் தழுவும் கொல்லிமலை தனிலே
காரிருள் பொழியும் குளிரருவி அருகே
குறிஞ்சிப் பூ பறிக்கக் சென்றாள்

திணை - பாலை

துறை - பணி முடிந்து மனை திரும்பும் தலைவன் வழியின் இயல்பு கண்டு வருந்தி தலைவிக்கு அனுப்பிய சிற்றோலை

மரமில்லா நெடுஞ்சாலை
மனமெல்லாம் வெறும் சோலை
எரும்பான நான் பிழைத்தால் மனை சேர்வேன்

விளக்கம் இங்கே

Sunday, October 14, 2012

கறை

மஞ்சம் மீது மழையெனப் பொழிந்து
கொஞ்சும் இரவொடு கலவிகே கலந்த
நெஞ்சம் நெகிழ்ந்த நெடுவானத் துகில் மேல்
மஞ்சள் கறையாய் மருவினன் கதிரோன்

English

Sunday, October 07, 2012

இராவண மகாத்மியம்


நோக்கின் எத்துனை அழகிந்த இராவணன்
ஆர்க்கும் அலைகடல் சுழிலங்கையின் காவலன்

பொன்மகுடமது பகலவன் என பொழிதல் காண்
தண்மேகமெனத் தான் கருத்த முகம் மீது
பொன்மகுடமது பகலவன் என பொழிதல் காண்
மின் எனப் புன்னகை காண் நகைத்தால் பேரிடி கேள்

மின் எனப் புன்னகை காண் நகைத்தால் பேரிடி கேள்
திண் எனத் தினவெடுத்த தோள்மலை மேல் உருண்டோடும்
மின் எனப் புன்னகை காண் நகைத்தால் பேரிடி கேள்
திண் எனத் தினவெடுத்த தோள்மலை ஈரிமயம் காண்

பொருமிப் பொங்கி பின் விழுந்தெழும் பேரலை பார்
இரும்பெனும் நெஞ்சில் ஈராயிரம் எண்ணமாய் வண்ணமாய்
அருமைப் பொன் மகுடத்தால் அருநீர் பருகும் மேகத்திற்கு நீர் தரப்
பொருமிப் பொங்கி பின் விழுந்தெழும் பேரலை பார்

பச்சைப் பட்டுடை போர்த்திய இடை என்ன வளமோ
இச்சையோடு அசைந்தாடும் இளநெல்லைப் போலே
இச்சையோடிவன் கருமுகம் பொழியும் எழில் மழையருந்தி
இச்சையோடு அசைந்தாடும் இடை என்ன வளமோ

வெள்ளி மின்னும் வாள் வெட்டுவதைக் காண்
துள்ளியோடும் நதியாய் தாவி எங்கும் இடை தனிலே
அள்ளித் தெளித்த நெல்லாய் ஆழகுப் பட்டாடை தனை
வெள்ளி மின்னும் வாள் வெட்டுவதைக் காண்

உண்மையுரைப்போம் வெரூ*உம் மானிடன் அல்ல இவன்
மன்னுயிர் புரக்கும் மாலயன் இவன்
பண்டிதர் படிக்கும் புருஷசுக்தம் அதனின்று வந்த
மன்னுயிர் புரக்கும் மாலயன் இவன்

சொல்லும் இவ்வுலகில் சுடர் தரும் சூரியன் இவன்
புல்லும் பனிமலையும் ஒருங்கே போற்றும் புரவலனிவன்
வல்லுயிர் உலகே வடிவான இவன் எதிர் வெறும்
வில்லுடை வேடுவன் தான் இந்த இராமன்

* - Must be the elongated form of வல்லின று. But Google transliterate does not recognize it for some reason. பொறுத்தருள்க.

In English

Sunday, September 30, 2012

இறைவன் எனக்கோர் ஈசல்


I shall die again and again to know that life is inexhaustible. - Stray flowers, Tagore.

இறைவன் எனக்கோர் ஈசல்.
எல்லாம் வல்ல
இறைவன் எனக்கோர் ஈசல்.

எல்லாம் வல்ல இறைவன்
எனக்கு,

ஒரு நொடி பிறந்து
ஒளியிடம் பறந்து
மறு நொடி இறந்து
மறுபடி பிறக்கும்

ஈசல்.


எல்லாம் வல்ல இறைவன்
என் தலையில்

ஒரு நொடி பிறந்து
பாட்டாய் மலர்ந்து
மறு நொடி மறந்து
மறுபடி பிறக்கும்

ஈசல்.

எல்லாம் வல்ல இறைவன்

மீண்டும் மிண்டும்
ஒரு நொடி பிறந்து
ஒரு நொடி படர்ந்து
மறு நொடி இறந்து
பிறப்பைக் கடந்து
இறப்பை உணர்ந்து
ஒளியைக் கலந்த

ஈசல்.


எல்லாம் வல்ல
இறைவன் எனக்கோர் ஈசல்.


இறைவன் எனக்கோர் ஈசல்.


Thursday, December 29, 2011

வெற்றி மந்திரம்

ஓம்!


அறிவென்பது முதலே அதுவிருந்தால்
அணுவும் அண்டம்
இன்றேல்
அண்டமும் அமைதி

எனில்,

முதலில்,

அறிவது அறிக! அறிந்தபின்
அறிந்தவற்றில் தெளிவது தெளிக

தெளிந்தபின் தெளிந்தவற்றில்
குறிப்பது குறிக

குறித்தப் பின் குறித்தவற்றில்
குறையின்றி அனைத்தும் துணிக

துணிந்தபின் துணிந்தவற்றில்
முடிவது முடிக

முடிந்தபின் முடிந்தது மிஞ்சியது
எல்லாமே ஒளி

ஒளியினில் ஒன்றி
அனைத்தும் அழித்து
இருட்டில் இறந்து
இறப்பில் துயின்று
துயிலில் எழுந்து

தீறா இருளில்
தீயாய்த் தோன்றி
தாயானவளை நினைந்து

மீண்டும்...

அறிவது அறிக!

Sunday, August 28, 2011

மரணம்

பாட்டி பிணமாய்க் கிடக்கிறாள், பெட்டியில்.
பெரிதாய் துக்கம் ஒன்றுமில்லை.
முதிர்ந்த கனி, மரத்தை விட்டது.
சற்றே சிந்தித்தால்...

பெட்டியில் பிணமாய்க் கிடப்பது பாட்டியல்ல
வெறும் பிணம்.

பிணத்தை விடுக.
சுற்றும் மக்கள்.

பாட்டியின் மக்கள்,
மக்களின் மக்கள்,
யார் யாரோ பெற்ற மக்கள்.

பாட்டி பிணமாய்க் கிடக்கிறாள், பெட்டியில்
பக்கத்தில்

பேசிக் கொண்டு சிலர்
பேப்பர் படித்துக் கொண்டு சிலர்
சிரித்துக் கொண்டு சிலர்
அழுது கொண்டு பலர்

போன தீபாவளிப் புடவை பற்றி
பேசிக் கொண்டு சிலர்

இந்தத் தீபாவளி புதுப் படத்தைப் பற்றி
பேப்பர் படித்துக் கொண்டு சிலர்

நக்கல் நையாண்டி கருத்து மாற்றியபடி
சிரித்துக் கொண்டு சிலர்

'பொண்ணு மாட்டுப் பொண்ணு எல்லாம்
தலையை விரிச்கிகொங்கோ'
என்று ஐயர் சொன்னவுடன்
அழுது கொண்டு பலர்

நீட்டிய கால் தொட பெண்களுக்குள் போட்டி
கையில் காசு கொடுத்துத் தேய்தேடுக்க ஆண்களுக்குள் போட்டி
நெய்பந்தம் பிடிக்க பேரன்களுக்குள் போட்டி

நேற்று வரை
'பாட்டிய கூட்டிண்டு போங்கோ'
என்று சொன்ன மருமகள்
இன்று 'காட்டுக்கு எடுத்துண்டு போங்கோ' என்கிறாள்.
சொல்லி விட்டுக் வராத கண்ணீர் வரவழைத்து அழுகிறாள்.

சொல்லில் உள்ள தெளிவு, செயலில் இல்லையே அம்மா!

காட்டிற்குப் போகிறோம்.
சட்டி உடைத்து சடங்கு செய்து
சாத்திரம் சாவின் உண்மை தெளிய வைக்கிறது.
உண்மையை வார்த்தையில் புதைத்து
விக்கி விக்கி அழுகிறார்கள்.

மார்க்கண்டேயனுக்கு அருள் புரிகிறான் காலந்தகன்
கஜேந்திரனுக்கு மோட்சம் தருகிறான் நாராணன்

மேலே சுவற்றில், சித்திரத்தில்,
மார்க்கண்டேயனுக்கு அருள் புரிகிறான் காலந்தகன்
கஜேந்திரனுக்கு மோட்சம் தருகிறான் நாராணன்
சுற்றிலும் கீதை -
'உடம்புக்கு சட்டை, உயிர்க்கு உடம்பு'
என்று உன்னதம் உரைத்த கீதை.

கீழே, கணினியின் கருணையில்
பாட்டிக்கு வைகுண்டம் தருகிறான் அக்னிதேவன்.

எல்லோரும் அழுகிறார்கள்
சிவனைப் பார்த்து, அரியையும் பார்த்து
கீதை படித்து, போதித்து
தினமும் வேதாந்தம் பழகி
யாகம் செய்து விரதம் நோற்று
வைராக்கியம் வளர்க்கும்
பிராமணர்கள் எல்லாம்
அழுகிறார்கள்.

வீட்டுக்கு வருகிறோம்.

தண்ணீர்க் குளியல்
பொங்கல் ஆகாரம்
கண்ணீர் எங்கே போயிற்று ஐயா?

சிரிப்பு, வம்பு, சண்டை

சாப்பாட்டில் உப்பு,
உடம்பில் சர்க்கரை,
கடையில் சேலை
எது குறைவு எது உசத்தி என்று விவாதம்

சின்னப் பெண் பெரியவர்களிடம் பாட்டுப் பாடி
பாராட்டு வாங்குகிறாள், நாளை
பெண் பார்க்கும் சடங்கிற்கு ஒத்திகை பார்க்கிறாள்.

இரவு வருகிறது
விவாதம்.
அச்சிறிய வீட்டில்,
அப்பொழுது முளைத்த
ஐந்தாறு சிறிய அரசியல் கட்சிகளுக்குள்
நாளை சடங்கு குறித்து விவாதம்.

சோற்று விவாதம்.
சாத்திரம் எல்லாம்,
சோற்றில் துவங்கி
சோற்றில் அடங்குகிறது.

ஓரத்தில் விளக்கு
மெதுவாய் எரிந்து கொண்டிருக்கிறது.
பாட்டி பிணமாய்க் கிடந்த இடத்தில்
ஓரத்தில் விளக்கு
மெதுவாய் இறந்து கொண்டிருக்கிறது.

ஒரு கேள்வி
செத்தது யார்?
பாட்டியா?
சாத்திரமா?
மனசாட்சியா?

Tuesday, July 07, 2009

மோகம்



தழுவித் தோளிரண்டும் திருகிடப் பற்றி
பழுத்த மாரிரண்டும் பாழெனப் போக
அழுத்தி அனலணைத்து அசையா மலையதை
கழுவெனக் கழுமிக் களித்தது மேகம்



கழு - கழுமரம். a stake to impale.
கழுமி - புணர்ந்து, இணைந்து, மயங்கி, மிகுத்து, திரண்டு


ஆங்கிலம்

Friday, February 13, 2009


அகம் களித்த கத்தினின்று
சகம் அளிக்கும் சக்தியே 
மகத்தினில் மனம் அடங்கி 
முகத்தில் தோன்றும் சோதியே 
புகபுகப் புவிகள் எங்கும் 
மிகுத்தெழுந்த மோகமே 
கணம் துளைத்து அனல் புகுத்து 
யுகம் படைக்கும் யோகமே 
அறத்தினோடு அழகும் சேர்த் 
திறந்திடாத இன்பமே

Thursday, November 20, 2008

வெற்றிச் சங்கெடுத்து விண்முட்ட ஊதுவீர் 
பற்றென்னும் பண்டைப் பிசாசறுத்தோம் 
விட்டென்னைப் போயிற்று வல்லுயிர்ப் பேய் 
தொட்டென்னைத் தழுவியது தூய மெய்யழகு

பேய் கொன்றோம் பொய்க் கவலைப் பிணம் தின்னும்
நாய் கொன்றோம் நொந்த நான் கொன்றோம் 
தாய் கொன்றோம் தாய் குடத்துச் சேய் கொன்றோம் 
நோய் கொன்றோம் நமன் வென்றோம் காணீரோ

இறந்திடுவோம் என்றொரு மொழி இனியும் கூறாதீர் 
பிறந்திட்டோம் பயன் பெறுவோம் பார்தனிலே 
அறஞ் செய்வோம் ஆனந்தம் பல அடைவோம் 
உரமேற்றி உள்ளத்தே தீ வளர்ப்போம்

சோதி தனைச் சேர்த்தொரு காதல் செய்வோம் 
ஆதி அரன் நாமே அன்னை அவளே அன்பால் 
ஓதி ஒன்றாவோம் உடலழித்து உயிர் வளர்ப்போம் 
மேதினியெங்கும் மலர்ந்திட்டக் காண்போம்

அறிவும் அழகும் அமுதக் குடமும் அலகில்லாது
எரியும் எண்ணத் தெளிவும் எழில்மிகு நிலவும் 
புரியும் விணையெல்லாம் புண்ணியமாய்ப் பொழியும் 
விழி கொண்டு வாழ்வெல்லாம் வளம்பெறச் செய்வோம்

வேள்வித் தீயிது நம் வாழ்க்கை உயிரின் 
வாளெடுத்து விணையென்னும் நோயறுப்போம் 
கோளில்லை குணமில்லை குற்றமேதுமில்லை 
நீள்கின்ற நினைவெல்லாம் நித்திய சோதியே

உள்ளம் நிலவாகும் உயிரெல்லாம் ஒளிக்குன்றாம் 
அள்ளக் குறையாத அமுதம் விண்ணெங்கும் 
வெள்ள்த் திரளாக உணர்வெல்லாம் பொங்கிடுமே 
தெள்ளத் தெளிவாக தரணியெல்லாம் தெரிந்திடுமே

Tuesday, June 10, 2008

பொன் - முற்று பகுதி

அரவம் எழுந்தது மாணிக்கம் கக்கியது!
உள்ளத்தே செம்மை பிறந்தது!
மாலை மனதோடு இயைந்தது!

ஆகா!
இது ஞான வானிடை சுரக்கும் அமுத ஊற்று!
ஆகா!
இது உள்ளத்திற் பிறந்து உலகத்தே விரிந்த
கவியின் கற்பனை!
ஆகா!
இது படைப்புக் கோலத்தில் பராசக்தி இடும் செம்மண்!
ஆகா!
இது ஆகாயத்திடை கலக்கும் ஆலய மணியோசை!
ஆகா!
இது தவச் சிவன் மேல் அனங்கன் எய்த ஆனந்த பாணம்!

மாலையே! மதன வடிவே!
மோகனமாய்ச் சிரிக்கும் பொற்சிலையே!
கையிரண்டில் சேர்க்க முடியா புதையலே!
கண் மூடி உன்னைக் கலக்கிறேன்!
இனி
என் மனமெல்லாம்
பொன்! பொன்! பொன்!
ரசம்! ரசம்! ரசம்!

Monday, June 09, 2008

பொன் - பகுதி முன்று

தளையனைத்தும் உடைந்தது
தங்கம் தரணி மக்கள் முகமெங்கும் மலர்ந்தது
வினையும் பயனும் இன்பத்தே இணைந்தன
தென்றல் தேர் ஏறி வலம் வந்தாள்
கலகம் கலக்கம் குழப்பம் இல்லா
பரசிவக் குளத்தில்
பராசக்தி கல்லொன்று எறிந்தாள்
படைப்பு பிறந்தது

அழகுக் கடல் ஆசை அலையால்
ஆயிரம் முறை சிவன் நெஞ்சில் அறைந்தாள்
மீண்டும் மீண்டும் தோள் தழுவி
கலவி கற்று களித்தாள்

புள்ளெல்லாம் பயன் பெற்று
பிறவி நீங்கி
பொன்னம்பல கூட்டிற்கெய்தின
உலகெல்லாம் உய்வுற்று
காரணம் காரியம் கருத்தொன்றிலாத
இன்ப சோதியாய் மலர்ந்தது

உள்ளப் பாற்கடலில்
உறக்க நாக சயனத்தில்
உரைக்க முடியா சோதியவன்
அழகு
இன்பம்
ஆசை
என்னும் அலையோசையில்
மயங்கி
மன்மதக் கனவில் முழ்கி
காரணம் அழிந்த குருடனாய்
குறிக்கோள் கெட்ட செவிடனாய்
முயற்சியற்ற மூடனாய்
எம்முள் எரிந்தான்

Wednesday, June 04, 2008

பொன் - பகுதி இரண்டு

விசும்பின் விளிம்பில்
உருண்டு
திரண்டு
விம்மி
களியாய் காதலாய் கரும்பாய்
வழியாய் வேட்கையாய் வேதனையாய்
வனப்பாய் அழகாய் உருவாய்
நின்ற அத்துளி
ஐயத்தே ஒரு நொடி ஊசல் கொண்டது
மறு நொடி மனம் தெளிந்தது

விடுக்கென்று பாசம் விட்டு
பந்தம் அற்று
துன்பம் கொன்று
ஆசை வென்று
காமம் கடந்து
விண்ணின் வெளியில் வெடித்துச் சிதறி
மாலை
எனும் மதன ரூபமாய் பிறந்த்ததே
அம்மாவோ!
அமுதம் எங்கும் வழிந்ததே!

Monday, June 02, 2008

பொன் - பகுதி ஒன்று

ஆகாயம்
வெட்ட வெளிக்கெல்லாம் வெளி நின்ற வேள்விக் களம்
அண்ணாந்து பார்த்தால் தெரியும் ஆனந்தப் பிரவாகம்
கண் முடிப் பார்த்தால் தெரியும் கற்பக விருட்சம்
மோனம் எனும் பாலை முடிவின்றிச் சுரக்கும் காமதேனுவின் மடி இழுக்கின்ற முச்சின் பிறப்பிடம்
அண்டத்தை ஒன்றிப் படரும் மதன மல்லிகைக் கொடி

இவ்வானில் இங்கே ஒரு முலையில்
முளைத்ததொரு தங்கத் துளி
பரமனவன் பட்டறையில்
பதமாய் உருக்கி பாவைச் சிலையாய் வடிக்க வைத்த
பசும் பொன் திரளில்
திமிரி ததும்பி தப்பிய துளி
மிதமான ஒளி
கண்ணை மயக்கும் கதகதப்பு
தனத்தின் வனப்பு
என
கன்னியாய் காட்டு தேவதையாய்
காமக் களஞ்சியமாய்த் தோன்றிய
கதிரின் துளி

பகல் என்னும் தந்தையின் கைபற்றி
பருவ வெறியோடு நிற்கும்
இரவுக் காதலனை நோக்கித்
தடுமாறி நிற்கும் துளி
பந்தமும் பாசமும் பற்றி
ஆசையும் களியும் கண்டு
அன்னலிற் தவிக்கும் மானிடத் துளி

Tuesday, April 22, 2008

கேள்வியின் நாயகியே

கண்மணியே காதலியே காத்திருக்கும் கவிக்குயிலே
கண்ணினிலே கேள்விதனை கூட்டி வைக்கும் காரிகையே
என்னைவிட்டு எங்கெய்தினாய் யாதியற்றினாய் என்று
கண்ணினிலே கேள்விதனை பூட்டி வைக்கும் பேரழகே

கேள்!

பொன்னமுதாய் பொழிந்திடும் ஓர் தனலைக் கண்டேன்
விண்ணதனைத் தழுவி நிற்கும் விருட்சம் கண்டேன்
எண்ணமெல்லாம் ஏற்றம் செய்யும் ஒளியக் கண்டேன்
கன்னமிரண்டும் சிவந்த வான் பெண்ணைக் கண்டேன்

கூட்டிற்கே விரைந்த்தோடும் சிட்டுக் குருவிகள்
கூட்டு சேர்ந்த்தே விளையாடும் சுட்டிச் சிறுமிகள்
தீட்டுகின்ற கதிரால் சிவந்த குட்டி அருவிகள்
காட்டுகின்ற மாலைப் பொழுதில் எல்லாம் கண்டேன்

விந்தை ஓராயிரம் வானில் கண்டேன்
சிந்தை சேர்ந்திடும் சத்தியம் கண்டேன்
முந்தைக் கவிஞன் மூத்த கம்பன் உவமை
இந்த மாலைப் பொழுதில் மலரக் கண்டேன்

காணுகின்ற பொருளிலெல்லாம் பெண்ணழகே என்னவளே
தோன்றுகின்ற காட்சியொன்றே என்றெண்ணித் தெளிந்த்தேன்
நாண்கின்ற வான்மகளை மீண்டும் கண்டேன்
தேனிறங்கும் நின்னழகை நாடி ஓடி வந்த்தேன்

Monday, January 29, 2007

இறுதி

துன்பத்திற்கு இறுதி இன்பமாம்
ஆசைக்கோர் இறுதி அன்பிலாம்
பண்பிற்கு இறுதியது பயனிலாம்
பாட்டிற்கு இறுதியது கூத்திலாம்

சொல்லிற்கு இறுதியே பொருளிலாம்
சாத்திரத்திற்கு இறுதி சமத்திலாம்
விள்ளற்கோர் இறுதி வாழ்க்கையாம்
வினைதனிற்கு இறுதி விடுதலையாம்

காதலிற்கு இறுதியெனில் கலத்தலில்
காலத்திற்கோர் இறுதியும் கலத்தலில்
சாதலிற்கு இறுதியெனில் சத்தியமே
சொல்வேன் எனக்கொரு இறுதியெனில் சக்தியே

Monday, January 08, 2007

காதல், இன்பம், ஒரு கவிதை

இன்பமாய் இனிமையாய் ஒரு மாலைப் பொழுது
தோட்டதிலமர்ந்து,
ஒவ்வொரு கனவாய்
ஒவ்வொரு கனவாய்
தென்றலிலே தோய்த்தெடுக்கும் மாலைப் பொழுது

அண்டமெல்லாம் ஆடிக் களித்து
ஒன்றான ஆனந்தமாய் அனந்தமாய் இன்பமாய்
வெடித்துச் சிதறி ஓடி, ஆடிப்பாடி, சிரித்துக் குலுங்கி
பூத்து, காய்த்து, பழுத்து பலவாய் பரந்து கூத்தடிக்க
ஓரிடத்தில் நானமர்ந்து ரசிக்கும் மாலைப் பொழுது.

ஆங்கே,

விளையாட்டில் சில பெண்கள்.
வயதும் வனப்பும் வளமையும் கூடி
வடிவாய் சில பெண்கள்குழந்தை மூன்று குமரி நான்கு என
விளையாட்டில் சில பெண்கள்

கண்கட்டி ஒரு விளையாட்டு
அதன் பின்,
நொண்டியாய் ஒரு விளையாட்டு
ஒருத்தி துரத்த மற்றோர் ஓட
பல பல விளையாட்டு.

சிரிப்பும் ச்ருங்காரமும்
கூத்தும் கைதட்டலும்
கோலாகலமாய் விளையாட்டு
கீகீ எனும் சிறுகுருவிகளைப் போல்பெருத்த ஆராவரத்துடன் விளையாட்டு
காணக் காண இன்பம் தரும் விளையாட்டு

இதைக் காண்கையில்,
கவிஞன் எனக்கோர் துணிவு
கற்பனை தரும் துணிவு
கண்மூடிக் கருத்தில் காணும் துணிவு

தோட்டத்திலேயோர் ஊர்வலம் கண்டோம்
மூன்று கன்னியர் முத்தாய் வரும்
ஊர்வலம் கண்டோம்
காதல் இன்பம் கவிதை என்னும்
மூன்று கன்னியர் முத்தாய் வரும்
ஊர்வலம் கண்டோம்

காதல் இன்பத்தின் தாய்
கவிதைக்கு இன்பம் தாய் அறிவு தந்தை
காதல் அசையாதது
காதல் அசைந்தால் இன்பம்
இன்பம் இயங்காதது
இன்பம் இயங்கினால் கவிதை
காதல் சக்தியாம்
இன்பம் சிவமாம்
இன்பம் சக்தியாம்
காதல் சிவமாம்
கவிதை முக்தியாம்

காதல் மலர்ந்தால் இன்பம்
இன்பம் கனிந்தால் கவிதை
காதல் உயிர் இன்பம் மூச்சு
கவிதை உணர்வு
உயிர் அசைந்தால் மூச்சு
மூச்சு இயங்கினால் உணர்வு

உயிர் பொருளற்றது
குறியொன்றுமில்லை உயிர்க்கு
உயிர் 'அது'வாகும்
உயிர் அதுவாயிருப்பது காதல்
காதல் குறியற்ற பொருளற்ற நிலை
காதல் கருவாகும்
உலக விளையாட்டின் மூலம் காதல்
ஒன்றானது காதல்

ஒன்று தன் பயன் துய்ப்பது இன்பம்
ஒன்று இரண்டாகி பின் மீண்டும்
ஒன்றாக விழைவது இன்பம்
உயிரின் குறி முச்சு
காதலின் குறி இன்பம்
வெளியிருக்கும் காற்று உள்சென்று
சக்தியாவது மூச்சு
வெளியிருக்கும் துன்பம் உள்சென்று
சக்தியாவது இன்பம்
காற்றே மூச்சாகும்
துன்பமே இன்பமாகும்
மூச்சுவிட மறந்தால் மரணம்
இன்பம் துய்க்க மறந்தால் மரணம்
மூச்சு உயிர் நிலையில் நிற்பது அமைதி
இன்பம் காதலில் நிற்பது சோதி

சோதி தரும் சுடரே கவிதை
ஒன்றும் இரண்டும் கலந்து களித்து காட்சியாகி
இச்சை தீர்ந்து இயங்குவது கவிதை
மூச்சு அறிவால் இயங்குவது கவிதை
இன்பத்தின் வழி வருவதே கவிதை
கவிதைக்கு என்றும் ஒரே தாய் - இன்பம்
மூச்சின் வெளிப்பாடு வாழ்வு
இன்பத்தின் வெளிப்பாடு கவிதை
வெளிப்படாத முச்சு விஷமாகும்
வெளிப்படாத இன்பம் விஷமாகும்
சீரோடு வரும் மூச்சு யோகம்
சீரோடு வரும் இன்பம் கவிதை

காதல் ஒளி இன்பம் சுடர் கவிதை விளக்கு
காதல் ஆதாரம் இன்பம் இசை கவிதை பாட்டு
காதல் கடவுள் இன்பம் பக்தி கவிதை முக்தி

விரிந்து கிடக்கும் பரம்பொருள் காதல்
சிலையில் சிரிக்கும் சக்தி இன்பம்
சிலையில் அவளைக் கண்டால் கவிதை

கண் திறக்கிறேன்
கன்னியர் தம் ஆட்டம் முடித்தனர்
என் கையினில் இப்பொழுது
காதல் மலர்ந்து
இன்பம் கனிந்து
கவிதை தவழ்கிறது

Wednesday, December 27, 2006

இறைவன் நான்


தவழும் தென்றலடா நான்
தரணி எங்கும் வாசமாகும்

நடக்கும் நதியடா நான்
நிலம் எல்லாம் என்னால் வளம்

காலைக் கதிரடா நான்
கண் விழித்தால் உலகுவிடியும்

சிரிக்கும் நிலவடா நான்
சிந்தையும் குளிர்ந்துவிடும் என்னொளியில்

தெரிக்கும் மழையடா நான்
தொட்ட இடமெல்லாம் தூய்மையாம்

மகிழும் மலரடா நான்
மலர்ந்தால் அணைத்தும் ஒளி

பரந்த விண்ணடா நான்
விரிந்தால் வையம் அடங்கும்

எரியும் நெருப்படா நான்
வீறு கொண்டால் எல்லாம் அழியும்

பாயும் புலியடா நான்
குரல் கொடுத்தால் குலை நடுங்கும்

சீறும் பாம்படா நான்
சினம் கொண்டால் படை நடங்கும்

பெருகும் வெள்ளமடா நான்
செறுக்கடைந்தால் தடையெல்லாம் தூள்

சுழலும் புயலடா நான்
துணிவு கொண்டால் உலகம் அஞ்சும்

நிறையும் இறையடா நான்
விளையாடினால் பிரபஞ்சம்

Monday, December 18, 2006

சக்தி பாட்டு

இன்புற்று இருப்பது வாழ்வு - அதில்
துன்பம் என்பதோர் பொய்யே
அன்புற்று இருப்பது இயல்பு
பண்பு இயல்பின் திறனே

ஆசை என்பதோர் பூசை - பேர்
ஆசை அதனிற் பீடை
ஓசை அனைத்தும் இசையே
பாஷை நமக்குக் கவியே

எண்ணம் என்பது எரியே - அதில்
பின்னம் நேர்வது பழுதே
திண்ணமாவது கருத்தே
சின்னமதற்கு நம் வி
னையே

காதல் நமக்கின்னுயிரே - வருந்தி
நோதல் நமக்கொரு நோயே
வேதம் என்பது அறிவே
சாதல் அதனாற் பொய்யாம்

சக்தி அவள் நம் துணிவே - பிரிந்து
புத்தி செய்வது பிழையே
சித்தி அவள் தரும் வரமே
சக்தி என்பது மெய்யே