Tuesday, April 22, 2008

கேள்வியின் நாயகியே

கண்மணியே காதலியே காத்திருக்கும் கவிக்குயிலே
கண்ணினிலே கேள்விதனை கூட்டி வைக்கும் காரிகையே
என்னைவிட்டு எங்கெய்தினாய் யாதியற்றினாய் என்று
கண்ணினிலே கேள்விதனை பூட்டி வைக்கும் பேரழகே

கேள்!

பொன்னமுதாய் பொழிந்திடும் ஓர் தனலைக் கண்டேன்
விண்ணதனைத் தழுவி நிற்கும் விருட்சம் கண்டேன்
எண்ணமெல்லாம் ஏற்றம் செய்யும் ஒளியக் கண்டேன்
கன்னமிரண்டும் சிவந்த வான் பெண்ணைக் கண்டேன்

கூட்டிற்கே விரைந்த்தோடும் சிட்டுக் குருவிகள்
கூட்டு சேர்ந்த்தே விளையாடும் சுட்டிச் சிறுமிகள்
தீட்டுகின்ற கதிரால் சிவந்த குட்டி அருவிகள்
காட்டுகின்ற மாலைப் பொழுதில் எல்லாம் கண்டேன்

விந்தை ஓராயிரம் வானில் கண்டேன்
சிந்தை சேர்ந்திடும் சத்தியம் கண்டேன்
முந்தைக் கவிஞன் மூத்த கம்பன் உவமை
இந்த மாலைப் பொழுதில் மலரக் கண்டேன்

காணுகின்ற பொருளிலெல்லாம் பெண்ணழகே என்னவளே
தோன்றுகின்ற காட்சியொன்றே என்றெண்ணித் தெளிந்த்தேன்
நாண்கின்ற வான்மகளை மீண்டும் கண்டேன்
தேனிறங்கும் நின்னழகை நாடி ஓடி வந்த்தேன்

Monday, January 29, 2007

இறுதி

துன்பத்திற்கு இறுதி இன்பமாம்
ஆசைக்கோர் இறுதி அன்பிலாம்
பண்பிற்கு இறுதியது பயனிலாம்
பாட்டிற்கு இறுதியது கூத்திலாம்

சொல்லிற்கு இறுதியே பொருளிலாம்
சாத்திரத்திற்கு இறுதி சமத்திலாம்
விள்ளற்கோர் இறுதி வாழ்க்கையாம்
வினைதனிற்கு இறுதி விடுதலையாம்

காதலிற்கு இறுதியெனில் கலத்தலில்
காலத்திற்கோர் இறுதியும் கலத்தலில்
சாதலிற்கு இறுதியெனில் சத்தியமே
சொல்வேன் எனக்கொரு இறுதியெனில் சக்தியே

Monday, January 08, 2007

காதல், இன்பம், ஒரு கவிதை

இன்பமாய் இனிமையாய் ஒரு மாலைப் பொழுது
தோட்டதிலமர்ந்து,
ஒவ்வொரு கனவாய்
ஒவ்வொரு கனவாய்
தென்றலிலே தோய்த்தெடுக்கும் மாலைப் பொழுது

அண்டமெல்லாம் ஆடிக் களித்து
ஒன்றான ஆனந்தமாய் அனந்தமாய் இன்பமாய்
வெடித்துச் சிதறி ஓடி, ஆடிப்பாடி, சிரித்துக் குலுங்கி
பூத்து, காய்த்து, பழுத்து பலவாய் பரந்து கூத்தடிக்க
ஓரிடத்தில் நானமர்ந்து ரசிக்கும் மாலைப் பொழுது.

ஆங்கே,

விளையாட்டில் சில பெண்கள்.
வயதும் வனப்பும் வளமையும் கூடி
வடிவாய் சில பெண்கள்குழந்தை மூன்று குமரி நான்கு என
விளையாட்டில் சில பெண்கள்

கண்கட்டி ஒரு விளையாட்டு
அதன் பின்,
நொண்டியாய் ஒரு விளையாட்டு
ஒருத்தி துரத்த மற்றோர் ஓட
பல பல விளையாட்டு.

சிரிப்பும் ச்ருங்காரமும்
கூத்தும் கைதட்டலும்
கோலாகலமாய் விளையாட்டு
கீகீ எனும் சிறுகுருவிகளைப் போல்பெருத்த ஆராவரத்துடன் விளையாட்டு
காணக் காண இன்பம் தரும் விளையாட்டு

இதைக் காண்கையில்,
கவிஞன் எனக்கோர் துணிவு
கற்பனை தரும் துணிவு
கண்மூடிக் கருத்தில் காணும் துணிவு

தோட்டத்திலேயோர் ஊர்வலம் கண்டோம்
மூன்று கன்னியர் முத்தாய் வரும்
ஊர்வலம் கண்டோம்
காதல் இன்பம் கவிதை என்னும்
மூன்று கன்னியர் முத்தாய் வரும்
ஊர்வலம் கண்டோம்

காதல் இன்பத்தின் தாய்
கவிதைக்கு இன்பம் தாய் அறிவு தந்தை
காதல் அசையாதது
காதல் அசைந்தால் இன்பம்
இன்பம் இயங்காதது
இன்பம் இயங்கினால் கவிதை
காதல் சக்தியாம்
இன்பம் சிவமாம்
இன்பம் சக்தியாம்
காதல் சிவமாம்
கவிதை முக்தியாம்

காதல் மலர்ந்தால் இன்பம்
இன்பம் கனிந்தால் கவிதை
காதல் உயிர் இன்பம் மூச்சு
கவிதை உணர்வு
உயிர் அசைந்தால் மூச்சு
மூச்சு இயங்கினால் உணர்வு

உயிர் பொருளற்றது
குறியொன்றுமில்லை உயிர்க்கு
உயிர் 'அது'வாகும்
உயிர் அதுவாயிருப்பது காதல்
காதல் குறியற்ற பொருளற்ற நிலை
காதல் கருவாகும்
உலக விளையாட்டின் மூலம் காதல்
ஒன்றானது காதல்

ஒன்று தன் பயன் துய்ப்பது இன்பம்
ஒன்று இரண்டாகி பின் மீண்டும்
ஒன்றாக விழைவது இன்பம்
உயிரின் குறி முச்சு
காதலின் குறி இன்பம்
வெளியிருக்கும் காற்று உள்சென்று
சக்தியாவது மூச்சு
வெளியிருக்கும் துன்பம் உள்சென்று
சக்தியாவது இன்பம்
காற்றே மூச்சாகும்
துன்பமே இன்பமாகும்
மூச்சுவிட மறந்தால் மரணம்
இன்பம் துய்க்க மறந்தால் மரணம்
மூச்சு உயிர் நிலையில் நிற்பது அமைதி
இன்பம் காதலில் நிற்பது சோதி

சோதி தரும் சுடரே கவிதை
ஒன்றும் இரண்டும் கலந்து களித்து காட்சியாகி
இச்சை தீர்ந்து இயங்குவது கவிதை
மூச்சு அறிவால் இயங்குவது கவிதை
இன்பத்தின் வழி வருவதே கவிதை
கவிதைக்கு என்றும் ஒரே தாய் - இன்பம்
மூச்சின் வெளிப்பாடு வாழ்வு
இன்பத்தின் வெளிப்பாடு கவிதை
வெளிப்படாத முச்சு விஷமாகும்
வெளிப்படாத இன்பம் விஷமாகும்
சீரோடு வரும் மூச்சு யோகம்
சீரோடு வரும் இன்பம் கவிதை

காதல் ஒளி இன்பம் சுடர் கவிதை விளக்கு
காதல் ஆதாரம் இன்பம் இசை கவிதை பாட்டு
காதல் கடவுள் இன்பம் பக்தி கவிதை முக்தி

விரிந்து கிடக்கும் பரம்பொருள் காதல்
சிலையில் சிரிக்கும் சக்தி இன்பம்
சிலையில் அவளைக் கண்டால் கவிதை

கண் திறக்கிறேன்
கன்னியர் தம் ஆட்டம் முடித்தனர்
என் கையினில் இப்பொழுது
காதல் மலர்ந்து
இன்பம் கனிந்து
கவிதை தவழ்கிறது

Wednesday, December 27, 2006

இறைவன் நான்


தவழும் தென்றலடா நான்
தரணி எங்கும் வாசமாகும்

நடக்கும் நதியடா நான்
நிலம் எல்லாம் என்னால் வளம்

காலைக் கதிரடா நான்
கண் விழித்தால் உலகுவிடியும்

சிரிக்கும் நிலவடா நான்
சிந்தையும் குளிர்ந்துவிடும் என்னொளியில்

தெரிக்கும் மழையடா நான்
தொட்ட இடமெல்லாம் தூய்மையாம்

மகிழும் மலரடா நான்
மலர்ந்தால் அணைத்தும் ஒளி

பரந்த விண்ணடா நான்
விரிந்தால் வையம் அடங்கும்

எரியும் நெருப்படா நான்
வீறு கொண்டால் எல்லாம் அழியும்

பாயும் புலியடா நான்
குரல் கொடுத்தால் குலை நடுங்கும்

சீறும் பாம்படா நான்
சினம் கொண்டால் படை நடங்கும்

பெருகும் வெள்ளமடா நான்
செறுக்கடைந்தால் தடையெல்லாம் தூள்

சுழலும் புயலடா நான்
துணிவு கொண்டால் உலகம் அஞ்சும்

நிறையும் இறையடா நான்
விளையாடினால் பிரபஞ்சம்

Monday, December 18, 2006

சக்தி பாட்டு

இன்புற்று இருப்பது வாழ்வு - அதில்
துன்பம் என்பதோர் பொய்யே
அன்புற்று இருப்பது இயல்பு
பண்பு இயல்பின் திறனே

ஆசை என்பதோர் பூசை - பேர்
ஆசை அதனிற் பீடை
ஓசை அனைத்தும் இசையே
பாஷை நமக்குக் கவியே

எண்ணம் என்பது எரியே - அதில்
பின்னம் நேர்வது பழுதே
திண்ணமாவது கருத்தே
சின்னமதற்கு நம் வி
னையே

காதல் நமக்கின்னுயிரே - வருந்தி
நோதல் நமக்கொரு நோயே
வேதம் என்பது அறிவே
சாதல் அதனாற் பொய்யாம்

சக்தி அவள் நம் துணிவே - பிரிந்து
புத்தி செய்வது பிழையே
சித்தி அவள் தரும் வரமே
சக்தி என்பது மெய்யே

Friday, December 15, 2006

சக்தி வருவாயே

நிலவாடும் இரவினிலே நதியோடும் கரையினிலே
கலவியிலே கலந்தாடி களியினிலே கவிபாடி
பலகாலம் பலபொழுது பாட்டினிலே பசிமறந்திருக்க
சிலநேரம் என்னோடு சிவசக்தி நீ வருவாயே

காதலிலே கருத்திணைந்து கையோடு கை சேர்த்து
நாதமெனும் தேவி நீ நான் எனும் நிலை எய்தி
போதமெல்லாம் போக்கி பொருளெல்லாம் பெற்று
காதலென காதலென கலந்திருக்க காளி நீ வருவாயே

ஆவியிலே தவம் இருத்தி மோகமென்னும் தீ வளர்த்து
தேவிநீ தேகமெல்லாம் யாகம் செய்து உள்ளமெங்கும்
மேவியோர் நினைவின்றி மதியின்றி மனமின்றி
தேவியவள் சக்தியென சக்தியென காதலென நீ வருவாயே

Sunday, November 12, 2006

கவிதை கேட்கும் காலைப் பொழுது


காலைப் பொழுது
மீண்டும்,
இன்னுமொரு காலைப் பொழுது
என்று
தள்ள முடியா
காலைப் பொழுது
இது
கவிதை கேட்கும் காலைப் பொழுது

இரவுக் குழந்தை
விழித்து
விடிந்து
கண் திறந்து
தெளிந்து
பகலாய்ப் பிறந்து
கதிராய் விரிந்து
பின்
என் சாளரம் வந்து
விழி தீண்டி
உயிர் தொட்டு
கவிதை கேட்கும் காலைப் பொழுது

குயிலிடம் பாட்டும்
மலரிடம் ஒளியும்
விண்ணிடம் இசையும்
நேற்றைய
நிலவிடம் மணமும்
பெற்று
என்னிடம்
கவிதை கேட்கும் காலைப் பொழுது

தவம் செய்து...
இரவெல்லாம் தவம் செய்து
வரமாய் என்னிடம்
கவிதை கேட்கும் காலைப் பொழுது

இனி
நாமோர் தவம் செய்வோம்.
தொழில் செய்து, உழன்று
இன்பம் சிலவும் துன்பம் சிலவும் கண்டு
வியர்வை ஒரு துளி சிந்தி
தொழில் செய்து
தவம் செய்வொம்.

தவம் செய்தால்,
இரவோர் வரம் தரும்.
கவிதை என்று
ஓர் வரம் தரும்.
அவ்வரந்தனை இரவல் தருவோம்
இரவலாய்
கவிதை கேட்கும் இந்த காலைப் பொழுதிற்கு

Thursday, October 26, 2006

தீ உண்டு

தீயொன்று உண்டே
வேனில் மலரின் உள்ளிருந்து சிரிக்கும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
காய்ந்த சருகெடுத்து உயிருடன் உண்ணும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
ஆலயத்திருந்து அமைதியில் அமரும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
அடுப்பினில் துவண்டு உழைப்பினில் உருகும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
காரணமொன்று இன்றி கானகம் கொல்லும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
அன்னமோராயிரம் உயிர்க்கிட்டு அகிலமளிக்கும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
காதலில் கனிந்து கண்ணில் ஒளிரும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
கண்ணில் தோன்றி காமத்தில் எரியும்
தீயொன்று உண்டே

முடிவில்,

தீயென்று ஒன்று இங்கு உண்டே.

Wednesday, October 18, 2006

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்...

இது ஒரு புது விடியல்!