Friday, October 14, 2016

மீனாட்சி தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

மீன்விழியே மரகதமே மாமதுரை நாயகியே
தேனே தேன்மொழியே தேன் ஒழுகும் பூவிதழே
தேன் ஒழுகும் பூவிதழே தென்மதுரை நாயகியே
நான் எழுதும் தமிழ் கேட்டு கண்மணியே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

கண்மணியே கண்ணுறங்கு கற்பகமே கண்ணுறங்கு
தென்மதுரை ஊராளும் சின்னவளே கண்ணுறங்கு
சின்னவளே தென்னவளே என்னவளே என்னுயிரே
பண்ணெடுத்து நான் பாட பால் நிலவே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

பால் நிலவே பனிமலையே பாம்பிருக்கும் சடை முடியே
ஆலிலையில் மிதந்து வரும் மாலவனின் பூந்தங்காய்
மாலவனின் பூந்தங்காய் மாவிலையின் நிறமுடையாய்
கோலத்தமிழ் நான் பாட கள்ளழகே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

கள்ளழகே சொல்லழகே நள்ளிரவின் நிலவழகே
கள்ளிருக்கும் கண்ணழகே சொல்லழியும் சிலையழகே
சொல்லழியும் சிலையழகே பிள்ளைத் தமிழ்ப் பாட்டழகே
பிள்ளைத் தமிழ் நான் பாட கிளியழகே கண்ணுறங்கு

கிளியழகே கொடியழகே புதுகுத்துவிளக்கழகே
விளையாடும் வைகையிலே களியாடும் நீரழகே
களியாடும் நீரழகே கோலோச்சும் அரசழகே
தாலாட்டு நான் பாட மீன்விழியே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

Saturday, October 08, 2016

நீ எங்கே?

அம்மா நீ எங்கே?
அழகான
அம்மா நீ எங்கே?
அழுகின்றேன்
அம்மா நீ எங்கே?

கண்ணே நீ எங்கே?
நான் ஈன்ற
கன்றே நீ எங்கே?
அழுவாயே
கண்ணே நீ எங்கே?

குளிரிடுதே பயம் வருதே
பசித்திடுதே
அம்மா பசித்திடுதே பால் கொடுக்கும்
அம்மா! அம்மா! நீ எங்கே?

குளிரிடுமே! பயம் வருமே!
பசித்திடுமே!
ஐயோ பசித்திடுமே! பால் குடிக்கும்
கன்றே! என் கண்ணே! நீ எங்கே?

கொஞ்சும் குரல் எங்கே? குழைந்து எந்தன்
முகம் நக்கும் நாவெங்கே? பால்
மண்டும் மடியெங்கே? அம்மா!
அம்மா! நீ எங்கே?

குட்டிக் கொம்பேங்கே? கொம்பின் நடுவிருக்கும்
சுட்டிச் சுருள் எங்கே? மடியை
முட்டிப் பால் குடிக்கும் கண்ணே! என்
குட்டிக் கன்றே! நீ எங்கே?

அசுரன் அடிச்சானோ? அரக்கன் புடிச்சானோ?
அம்மா நான் வரவோ உன்னைக் காப்பாத்த?
ஐயோ முடியலையே அடியும் எடுத்து வைக்க
அம்மா நீ எங்கே? அம்மா நீ எங்கே?

அசுரன் யாருமில்லை. அரக்கன் எவனுமில்லை.
கண்ணே உன்னைக் கொல்லும் கம்சன் கொடும்பாவி
பசுவின் பால் திருடும் மனுஷப் பேய் தானே,
கண்ணே நீ எங்கே? கண்ணே நீ எங்கே?

அம்மா நீ எங்கே?

கண்ணே நீ எங்கே?

இனியும் செய்யலாமோ

இனியும் செய்யலாமோ தங்கமே.   இன்னுயிர்க் கொலை
கனியும் காயுமுண்டு பசி தீர்க்க இனியும் செய்யலாமோ

பிணியன்றோ பாவம் பழுதன்றோ தங்கமே
இனிய விலங்கெல்லாம் விலங்கிட்டு உயிர் குன்றி
கொடிய வாழ்வெய்தி கொம்பறுத்து வாலறுத்து
தனியே தவித்தழுதால் தங்கமே தவறன்றோ எனவே (இனியும்...)

கண்ணுண்டு காண்பதற்கு காதுண்டு கதறல் கேட்பதற்கு
எண்ணும் மனமுண்டு எவர் வலியும் உணர்வதற்கு
கண்டால் குலை நடுங்கும் தங்கமே கேட்டால் உயிர் உருகும்
உண்ணவும் மனம் வருமோ  உண்மை நீ அறிந்தால் பின் (இனியும்...)

புலையர்க்கு விடுதலை செய்தொம் பெண்டிற்கும் விடுதலையாம்
அலை கடல் சூழ் அவனியிலே அனைவர்க்கும் விடுதலையாம்
உலை படும் உயிர் மட்டும் தங்கமே உடலுறுகி உணர்வறுத்து
தளை பட்டு தவிதிருந்தால் தவரன்றோ தங்கமே (இனியும்...)