Sunday, August 14, 2016

சாக்கடையோர் கங்கை நதி

பூதளத்தின் பாவமெல்லாம் தான் சுமக்கும்
    மலம் அகற்றும் மண(ன)ம் அழிக்கும்
பாதளத்தின் அடிபாயும் பொங்கி எழும்
    நஞ்சினூடே தான் ஓடும் நன்னிலவை
சீதளமாய் நுதலணிந்த சுந்தரியாம்
   ஆபிராமவல்லியின் அழகிய தாள் அல்லிப்
பூதளத்தைப் பற்றித் தொழும் பித்தருக்கே
    சாக்கடையோர் கங்கை நதி

விளக்கம்:

அல்லிப் பூவின் இடமான அபிராம வல்லியின்  அழகிய தாளைப் பற்றித் தொழும் பித்தருக்கு,

கங்கை நதி வெறும் சாக்கடையாம்

எங்கனம்?

கங்கை பூமி மேல் மனிதர் இழைத்த பாவமெல்லாம் சுமக்கும்.
சாக்கடை பூமி மேல் மனிதர் செய்யும் கழிவெல்லாம் சுமக்கும்.

கங்கை நதியில் நீராடினால் முற்பிறப்பின் மணம், வாசனை அழியும்.
சாக்கடை தன் துர்நாற்றத்தினால் (நறு) மணத்தை அழிக்கும்.

கங்கை நதி பாதாளம் வரை பாய்ந்து பின் பொங்கி எழுந்தது.
சாக்கடை பாதாளத்தில் ஓடி மலம் மிகுந்து பின் பொங்கி எழும்.

கங்கை நதி சிவனின் சடையிலே ஆலகால நஞ்சிற்கும் அவன் மேனி மேல் ஆடும் பாம்புகளின் நஞ்சிற்கும் இடையே ஓடும்.
சாக்கடை மனிதக் கழிவின் நஞ்சின் இடையே ஓடும்.