Tuesday, May 03, 2016

ஊழிக் கூத்து

 தரிகிட தரிகிட தரிகிட தாம் தாம்
 தரிகிட தரிகிட தரிகிட தாம் தாம்

வருகுது வருகுது ஊழியின் கூத்தே
உருகுது உருகுது வினை சூழ் உலகம்
மருவுது மருவுது மலை நதி நிலமே
சருகென கருகுது வாழ்வின் மரமே

நிலவனி சடையன் நிலை மறந்தாட
சடசட படபட கடகட வெனவே
மலை வயல் வனம் கடல் பாலையாகி
உலை படு மீன் என உருக்குலைந்தனவே

நிலவே கதிரே நட்சத்திரமே
உலவும் கோளே உறையும் வெளியே
வினையின் மரத்தே வீழும் கனியே
களையாய் கணத்தில் அறுபட்டனவே

காலக் களிற்றின் கொடும் பசிப் பிணிக்கே
கானல் அண்டம் ஒரு வாய்ப் பிண்டம்
கையில் எடுத்துக் கனலில் சமைத்துக்
கணத்தில் விழுங்கும் காட்சியைக் காண்! காண்!

தண்டை யுடுக்கைத் தாள் கரம் ஆட
அங்கும் இங்கும் அனல் விழியோட
மண்டை யோட்டில் அமுதம் உண்ணும்
சங்கரன் ஆட்டம்! சங்கரன் ஆட்டம்!

ஆயிரம் சங்கரர் ஆதியின் அன்னை
ஆகா! அழகு விழி சிமிட்டினளே!
ஆயிரம் சங்கரர் ஆயிரம் ஆட்டம்
ஆயிரம் அண்டம் அழிந்தொய்ந்தனவே!

ஆகா! ஆகா! எத்தனை அழிவே!
ஆகா! ஆகா! எல்லாம் அழிவே!
ஆகா! ஆகா! எத்தனை அழகே!
அழிந்திட அழிந்திட அழகே! அழகே!